சென்னை: டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப்.16) இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
டெல்லியில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதனையடுத்து, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று இரவு எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். அமித் ஷா இல்லத்தில் நடந்த இந்தச் சந்திப்பின்போது, எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக எம்.பிக்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம், இன்பதுரை, தனபால் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னணி என்ன? – அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வரும் நிலையில், கட்சியை ஒன்றிணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் குரல் கொடுத்து வந்தார். கடந்த செப்.5-ம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பை வலியுறுத்தி பரபரப்பை ஏற்படுத்திய செங்கோட்டையன், பழனிசாமிக்கு 10 நாள் கெடுவும் விதித்தார். இதற்கிடையில் அவர் டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து பேசிவிட்டு வந்தார்.
அதிமுக தலைமையில் கூட்டணி அமைந்துள்ள நிலையில், அதிமுக உட்கட்சி விவகாரத்தில் ஒருவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், அவரை சந்திக்க அமித் ஷா நேரம் ஒதுக்குவதும், சந்திப்பதும் பழனிசாமிக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாகவும், கூட்டணியை வலுப்படுத்துவது, கூட்டணி கட்சிகள் இணைந்து மக்களை சந்திப்பது, இதர கட்சிகளை கூட்டணிக்கு இழுப்பது, தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம், விஜய் கட்சிக்கு உள்ள மக்கள் ஆதரவு உள்ளிட்டவை குறித்தும் அமித் ஷா உடனான இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.