சென்னை: மதுரை ஆதீனத்துக்கு எதிரான வழக்கில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கை போலீஸார் அரசியல் கண்ணோட்டத்துடன் அணுகியுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் கடந்த மே மாதம் நடைபெற்ற சைவ சித்தாந்த மாநாட்டில் பங்கேற்க வந்த மதுரை ஆதீனத்தின் கார் மீது உளுந்தூர்பேட்டை அருகே மற்றொரு கார் மோதியது. அதையடுத்து தன்னை கொலை செய்ய சதி நடந்துள்ளதாகவும், இதில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் உள்ளதாகவும் மதுரை ஆதீனம் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.
அதையடுத்து மத ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கில் பேசியுள்ளதாக மதுரை ஆதீனம் மீது சென்னை சைபர் கி்ரைம் போலீஸார் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் முன்ஜாமீன் வழங்கியது.
தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஆதீனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், விசாரணை என்ற பெயரில் அவருக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது என போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸார் தரப்பில், “மதுரை ஆதீனம் மத ஒற்றுமையை சீர்குலைத்து சட்டம் – ஒழுங்கு பாதிக்கப்படும் வகையில் பேசியதால்தான் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸாரின் விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு அளிப்பதில்லை. முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கிறார்” என தெரிவிக்கப்பட்டது.
ஆதீனம் தரப்பி்ல், காவல்துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும், சிலர் சீருடையில்லாமல் வந்து விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “இந்த விவகாரத்தை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டு இருந்தால் அப்போதே முடிந்து போய் இருக்கும். நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன. இந்த விவகாரத்தில் போலீஸார் அரசியல் கண்ணோட்டத்துடன் வழக்கு பதிவு செய்து பெரிதுபடுத்தியுள்ளனர்” என கருத்து தெரிவித்தார்.
பின்னர், இந்த வழக்கின் விசாரணை குறித்த நிலை அறிக்கையை போலீஸார் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை அக்.27-க்கு தள்ளி வைத்துள்ளார். அதுவரை மதுரை ஆதீனத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என்ற இடைக்கால உத்தரவையும் நீ்ட்டித்து உத்தரவிட்டுள்ளார்.