கர்னூல்: ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில், பள்ளிச் சுவர் இடிந்து விழுந்ததில் ஐந்து வயது மாணவர் ஒருவர் உயிரிழந்தார். 10 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
கர்னூலில் காவடி தெருவில் உள்ள கீர்த்தி ஆங்கில வழி உயர்நிலைப் பள்ளியில், இன்று காலை தொழுகைக்காக பள்ளிக்கு வெளியே சுவருக்கு அருகில் நின்று கொண்டிருந்த மாணவன் ரகீப்பும், இன்னும் சிலரும் சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்தனர். அந்த மாணவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அங்கு ரகீப் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் 10 மாணவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய ஆந்திர மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் நர லோகேஷ், இந்தச் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்ததோடு, காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு மாவட்ட அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். தனியார் பள்ளி நிர்வாகங்கள் அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் அமல்படுத்துவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், இறந்த மாணவரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.
மாணவரின் மரணம் குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்திய கர்னூல் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவான, தொழில் மற்றும் வணிக அமைச்சர் டி.ஜி.பரத், சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.