மாானமதுரை: விஜய் வருகையால் அனைத்துக் கட்சிகளின் வாக்குகள் சிதறும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் மானா மதுரை அருகே கட்டிக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ப.சிதம்பரம் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.53.50 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.
கார்த்தி சிதம்பரம் எம்.பி. அடிக்கல் நாட்டினார். ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் அரவிந்த், பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் இளங்கோவன், முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர், கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விஜய்க்கு பெரிய அளவில் கூட்டம் கூடியுள்ளது. தானாக வந்த கூட்டம் என்பதால் ஒரு சக்தி இருப்பதை மறுக்க முடியாது.
இந்தக் கூட்டம் அமைப்பாக மாறி, தேர்தலில் எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பதை காலம்தான் சொல்லும். விஜய் வருகையால் அனைத்துக் கட்சிகளில் இருந்தும் வாக்குகள் சிதறும். கட்சி தொடங்குவோர், ஆளுங்கட்சிக்கு எதிராகத்தான் தொடங்குவர். எதிர்க்கட்சிக்கு எதிராகத் தொடங்குவதில்லை.
திமுக அரசு பல திட்டங்களைச் செய்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை பெண்களிடம் சென்று சேர்ந்துள்ளது. சில காரணங்களால் சிலருக்கு விட்டுப்போய் இருக்கலாம்.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளைப் பொருத்து, அந்த சமயத்தில் அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெறுவது குறித்து முடிவு செய்யப்படும். ஏற்கெனவே அமைச்சரவையில் இடம்பெற கடந்த 2006-ல் வாய்ப்பு வந்தது. அதை நாங்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. எங்கள் கூட்டணி வலுவாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.