கவுகாத்தி: அசாமின் உடல்குரியில் இன்று மாலை 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.41 மணியளவில் உடல்குரியில் 5.8 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையம் உடல்குரி மாவட்டத்தின் மையப்பகுதியில் இருந்தது. நிலநடுக்கத்தின் ஆழம் 5 கி.மீ ஆக இருந்தது” என தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் நில அதிர்வு வடக்கு வங்கத்திலும், அண்டை நாடான பூடானிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட காயம், சொத்துக்கள் சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. முன்னதாக, செப்டம்பர் 2 ஆம் தேதி அசாமில் உள்ள சோனித்பூரில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அசாம் முன்னாள் முதல்வர் சர்பானந்தா சோனோவால், “அசாமில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்தனைகள் செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.