சென்னை: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் மக்கள் அளிக்கும் அனைத்து மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று காலை, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின்கீழ் துறை வாரியாக பெறப்பட்ட மனுக்கள், அதன் மீதான தீர்வு மற்றும் நிலுவை விவரங்கள் குறித்து அலுவலர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும், பெறப்பட்ட மனுக்களை ஆய்வுசெய்து, உரிய கால கட்டத்துக்குள் தீர்வு காணப்படுவதை கண்காணிக்கவும் துறை செயலர்களுக்கு அறிவறுத்தினார்.
மேலும், இதுவரை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் அரசின் 15 துறைகளில் பட்டியலிடப்பட்ட 46 சேவைகளில் பெறப்பட்ட 14 லட்சத்து 54,517 மனுக்களில், 7 லட்சத்து 23,482 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்றும், தீர்வு செய்யப்பட்ட மனுக்களில் 5 லட்சத்து 97,534 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும் இது தீர்வு செய்யப்பட்ட மனுக்களில் 83 சதவீதம் ஆகும் என்றும் முதல்வரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்போது முதல்வர் வழங்கிய அறிவுறுத்தல்கள்: தகுதியுள்ள அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காண வேண்டும். குறிப்பாக, வருவாய்த் துறை, கூட்டுறவுத் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, எரிசக்தி துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை போன்ற முக்கியத் துறைகளின் மனுக்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். நகராட்சி நிர்வாகத் துறையில் சொத்துவரி, குடிநீர் தொடர்பான கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேளாண்மைத் துறையில், விவசாயிகளின் தேவைகளான இடுபொருட்கள், விவசாய இயந்திரங்கள் தொடர்பான மனுக்களின் மீது அதிக கவனம் செலுத்தி, விவசாயிகளின் தேவைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ரேஷன் கார்டுகளில் முகவரி மாற்றம் தொடர்பான மனுக்கள் மற்றும் பட்டா சம்பந்தமான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகளிர் உரிமைத் திட்டம்: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பான கள ஆய்வுகளை விரைந்து முடிக்க வேண்டும். முகாம்கள் நடைபெற்றபோது மக்கள் தெரிவித்த கருத்துகளை கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக தெருவிளக்கு, இணைப்புச் சாலை, குடிநீர் போன்ற சமுதாய கோரிக்கைகள் தொடர்பான மனுக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை பொறுத்தவரை மக்கள் அளிக்கும் அனைத்து மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்காக அனைத்து அரசு துறைச் செயலர்கள், மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் தொடர்ச்சியாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, பணிகளை ஒருங்கிணைத்து, மக்களின் மனுக்களுக்கு தீர்வு காணப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் திட்ட வழிகாட்டுதலின்படி வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை சிரத்தையுடன் கண்காணிப்பதுடன், பெறப்படும் மனுக்களின் மீது உரிய கால கெடுவுக்குள் சரியான தீர்வு வழங்குவதையும் துறை செயலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு முதல்வர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், தலைமைச்செயலர் நா. முருகானந்தம், முதல்வரின் முகவரித் துறை செயலாளர் பெ.அமுதா, நிதித்துறை செயலர் த.உதயச்சந்திரன், அரசுத்துறை செயலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.