சென்னை: “இதிகாசங்களிலும் புராணங்களிலும் தான் அதிசய மனிதர்களை பற்றி படித்திருக்கிறேன். ஆனால் நான் கண்ணால் பார்த்த அதிசய மனிதர் இளையராஜாதான்” என்று ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.
கடந்த 1975-ம் ஆண்டு தொடங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதனையொட்டி இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் திரையுலகில் பொன் விழா காணும் இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசின் சார்பில் மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் பேசிய ரஜினிகாந்த், “இதிகாசங்களிலும் புராணங்களிலும் தான் அதிசய மனிதர்களை பற்றி படித்திருக்கிறேன். ஆனால் நான் கண்ணால் பார்த்த அதிசய மனிதர் இளையராஜாதான். நம்முடைய உலகம் வேறு அவருடைய உலகம் வேறு. அவர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் வேறு ஒரு இசையமைப்பாளர் ஒருவர் வந்தார். ராஜாவுடன் பணியாற்றிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் அவரிடம் சென்றுவிட்டனர். ரஜினிகாந்த் உட்பட. ஆனால் இளையராஜாவிடம் எந்த சலனமும் இல்லை. இப்போதும் அவருடைய பாடல்கள் சூப்பர்ஹிட் ஆகின்றன” என்று தெரிவித்தார்.