வாஷிங்டன்: இந்தியா மீது விதிக்கப்பட்ட 50% வரி பிளவை ஏற்படுத்தியது என்றும், உக்ரைன் பிரச்சினை ஐரோப்பாவின் பிரச்சினை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஃபாக்ஸ் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த டொனால்டு ட்ரம்ப், “செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்தார். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர முடியாதது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ட்ரம்ப், “உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வருவது எளிதாக இருக்கும் என்று நினைத்தேன். சமரசம் ஏற்பட வேண்டுமானால் இரு தரப்புக்கும் அதில் ஒரே நேரத்தில் ஆர்வம் இருக்க வேண்டும். புதினுக்கு ஆர்வம் இருக்கும்போது ஜெலன்ஸ்கிக்கு இல்லை. ஜெலன்ஸ்கிக்கு இருக்கும்போது புடினுக்கு இல்லை.
தற்போது போரை முடிவுக்குக் கொண்டு வர ஜெலன்ஸ்கி விரும்புகிறார். ஆனால், புதின்… கேள்விக்குறி. புதினுடன் எனக்கு எப்போதும் சிறந்த உறவு இருந்தது. இது நான் தீர்க்காத ஒரே போர்.
போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் வங்கிகளுக்கு எதிரான தடைகள், எண்ணெய் ஏற்றுமதிக்கு அதிக வரி விதிப்பு ஆகியவற்றை நான் ஏற்கனவே செய்துவிட்டேன். நான் நிறைய செய்துள்ளேன்.
நான் ஏழு போர்களை முடிவுக்குக் கொண்டு வந்தேன். பாகிஸ்தான் – இந்தியா உட்பட பலவற்றைச் செய்தேன். சில தீர்க்க முடியாதவை. குறிப்பாக காங்கோ மற்றும் ருவாண்டோ இடையேயான மோதல். நான் அதை முடிவுக்குக் கொண்டு வந்தேன். பல லட்சம் மக்கள் கொல்லப்பட்ட தீர்க்க முடியாத போர்களை நான் தீர்த்தேன்” என தெரிவித்துள்ளார்.
இந்தியா உடனான உறவு குறித்து பேசிய ட்ரம்ப், “இந்தியா அவர்களின் (ரஷ்யாவின்) மிகப் பெரிய வாடிக்கையாளராக இருக்கிறார்கள். ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு நான் 50% வரியை விதித்தேன். உண்மையில் இது ஒரு பெரிய விஷயம். இது இந்தியாவுடன் விரிசலை ஏற்படுத்துகிறது. இது (உக்ரைன்-ரஷ்யா போர்) நமது பிரச்சினை என்பதைவிட ஐரோப்பாவின் பிரச்சினை” என தெரிவித்துள்ளார்.