சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைப் பயணத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பாராட்டு விழா நடைபெறுகிறது.
இசைஞானி இளையராஜா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் 1,500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில், 8,500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
முழு மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசை சிகரத்தையும் தொட்டு சாதனை படைத்தார். இதை முன்னிட்டு, ‘‘இளையராஜாவின் அரை நூற்றாண்டு கால திரை இசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்” என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, இன்று மாலை 5.30 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் திரையுலகில் பொன் விழா காணும் இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசின் சார்பில் மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இன்னிசை நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து இளையராஜாவி்ன் சிம்பொனி இசை நிகழ்ச்சியும் நடைபெறும். விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரையாற்றுகிறார். முதல்வர் ஸ்டாலின் தலைமையுரையாற்றுகிறார்.
நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். இறுதியில் இளையராஜா ஏற்புரையாற்றுகிறார். முன்னதாக, நேற்று முன்தினம், இவ்விழாவுக்கான அழைப்பிதழை, நடிகர்கள் ரஜினி, கமல் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜாவிடம், அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் அதிகாரிகள் நேரில் வழங்கியது குறிப்பிடத்தக்கது.