விழுப்புரம்: தமிழகத்தில் வகுப்புவாதிகளால் சாதி பாகுபாடு ஏற்படுத்தப்படுகிறது. பள்ளி வகுப்புகளில்கூட பாகுபாடு பார்க்கப்படுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்தார். ஆரோவில் அறக்கட்டளை சார்பில், ‘இந்திய குடியரசின் சாதனை கள், சவால்கள் மற்றும் வருங்கால திட்டங்கள்’ எனும் தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் புதுச்சேரி அடுத்த ஆரோவில்லில் நேற்று நடைபெற்றது. தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், ஆரோவில் அறக்கட்டளையின் செயலர் ஜெயந்தி ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: பாரதத்தின் நோக்கம் என்னவோ, அதுவே ஆரோவில் நோக்கமாகும். 75 வருட குடியரசு நாட்டில் நமக்கு கிடைத்தது என்ன? கிடைக்காதது என்ன? என்பதை யோசிக்க வேண்டும். 2014-ம் ஆண்டுக்கு முன்பும், பின்பும் என நமது நாட்டின் வளர்ச்சியைப் பிரிக்கலாம். நாட்டின் ஒவ்வொரு குடிமக்களுக்கும் சமூக, பொருளாதார நீதி, அரசியல் நீதி கிடைக்க வேண்டும்.
நாள் தோறும் செய்தி தாள்கள் படிக்கும்போது, தமிழகத்தில் பட்டியலின மக்கள் படும் துயரங்களை பார்க்க முடிகிறது. அவர்களுக்கு தனி வழி, தனி பாதை என்பது நமது மாநிலத்தில் இருக்கிறது. வகுப்புவாதிகளால் இன்றைக்கும் பாகுபாடு ஏற்படுத்தப்படுகிறது. பள்ளிகளில் வகுப்பறைகளில் கூட சாதி பாகுபாடு இருக்கிறது.
உலகளவில் பொருளாதாரத் தில் 6-வது வளர்ந்த நாடாக இருக்கிறோம். 2014-ம் ஆண்டுக்கு முன்பு 30 சதவீத மக்கள் நமது நாட்டில் ஏழை மக்களாக இருந்தனர். 75 ஆண்டுகளாக 3 தலைமுறைகளாக பெரிய பொருளாதார பிரச்சினைகளை சந்தித்து வந்தனர். மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு ஏழைகளின் எண்ணிக்கை 26 சதவீதமாக குறைந்துள்ளது.
முன்பு ஒரு இன மக்களுக்கும், மற்றொரு இன மக்களுக்கும் இடையே மோதல் நிலவியது. நாட்டின் 200 மாவட்டங்களில் மாவோயிஸ்ட் பிரச்சினை இருந்தது. காஷ்மீரில் இந்து மக்கள் துரத்தி அடிக்கப்பட்டனர். 2014-ம் ஆண்டுக்கு பிறகு நிலை மாறியது. வடகிழக்கு மாநிலங்களிலும் அமைதி ஏற்பட்டுள்ளது. இந்தியா மீது அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம் என்ற பாகிஸ்தான், தற்போது அடங்கி கிடக்கிறது. ஆனாலும், நம் நாட்டில் தேர்தலில்வாக்களிக்க பணம் கொடுக்கப்படுகிறது.
ஆயிரம் ஆண்டுகளாக பிரித்தாளும் சூழ்ச்சி நடைபெறுகிறது. ஆயிரம் மதங்கள் இருந்தாலும், ஒரே தர்மம் மட்டுமே உள்ளது. அது சனாதன தர்மம். ‘பாரதத்தில் வாழும் அனைவருக்கும் ஆன்மிக ஆற்றல் உள்ளது’ என அரவிந்தர் கூறினார். ஆயிரம் ஆண்டுகள், அந்நியர்கள் நம்மை ஆட்சி செய்தாலும், பாரதத்தை அதன் தன்மைமாறாமல் சனாதனம்தான் காப்பாற்றியது.
தமிழகம் ஆழ்வார்கள், நாயன்மார்களின் பூமி. பாரதத்தில் ஒரே குடும்பமாக நினைத்து வாழ வேண்டும். பிரதமர் மோடி, திருக்குறளை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்து வருகிறார். தமிழ் செம்மொழி ஆய்வு நிறுவனத்தை நிறுவினார். ராஜேந்திர சோழனை இந்திய அரசு பெருமைப்படுத்தியுள்ளது. இவ்வாறு ஆளுநர் பேசினார்.