சென்னை: தமிழகத்தில் முந்திரி உற்பத்தியை அதிகரித்து அந்த தொழிலைமேம்படுத்த தமிழ்நாடு முந்திரி வாரியம் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: முந்திரி உற்பத்தியை அதிகரிக்கவும், முந்திரிசார் தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கவும், முந்திரி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்கவும் ரூ.10 கோடியில் தமிழ்நாடு முந்திரி வாரியம் ஏற்படுத்தப்படும் என்று 2025-26-ம்ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதை செயல்படுத்தும் விதமாக மாநில அளவிலான முந்திரி வாரியத்தை அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு முந்திரி வாரியம் கடலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும். துறை அமைச்சர் வாரியத்தின் தலைவராகவும், அரசு பிரதிநிதி துணைத் தலைவராகவும், வேளாண்மை உற்பத்தி ஆணையர் செயலராகவும், துறை அதிகாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட 12 உறுப்பினர்கள் கொண்டதாக இது இருக்கும். இதுதவிர முந்திரி வாரிய செயல்பாடுகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ள வேளாண்மை உற்பத்தி ஆணையர் தலைமையில் நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. முந்திரி உற்பத்தி, பதப்படுத்துதல், முந்திரி தொழிலாளர்களின் நலன் காத்தல் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்து முடிவெடுக்க 3 மாதங்களுக்கு ஒரு முறை நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும்.
இதற்கிடையே, தமிழகத்தில் முந்திரி உற்பத்தி, முந்திரித் தொழிற்சாலைகளின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய இயலாத நிலையில் உள்ளது. அதனால் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து முந்திரிக் கொட்டைகள் இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்நிலையை சீராக்கும் விதமாக முந்திரி உற்பத்தியில் தன்னிறைவு அடைவதை நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடு முந்திரி வாரியம் செயல்படும். இதன் மூலம்முந்திரி சாகுபடி, அறுவடை, மதிப்புக் கூட்டுதல் தொடர்பான புதிய வேலைவாய்ப்பு பெருகும்.
உழவர்களின் தேவைக்கேற்ப அதிக மகசூல் தரும் புதிய ரகங்கள், இயந்திர தொழில்நுட்பங்கள், பூச்சி, நோய் மேலாண்மை குறித்து ஆலோசனைகள் வழங்குதல், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த பயிற்சி, முந்திரி பதப்படுத்தும் நிலையம் அமைத்தல் தொடர்பான நிதியுதவி மற்றும் திட்டங்கள் குறித்து ஆலோசனை வழங்குதல், முந்திரிக்கான சேமிப்பு வசதிகள், ஏற்றுமதியை ஊக்குவித்தல் போன்ற பல்வேறு பணிகள் வாரியத்தால் மேற்கொள்ளப்படும். இதன்மூலம் முந்திரித் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரும் பயன்பெறுவதுடன், முந்திரித் தொழில் மேம்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.