வாஷிங்டன்: அமெரிக்காவின் ஆளும் குடியரசு கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான சார்லி கிக்கை கொலை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று தான் நம்புவதாகவும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலின்போது குடியரசு கட்சிக்கு ஆதரவாக மிகத் தீவிரமாக பிரச்சாரம் செய்தவர் சார்லி கிர்க். கடந்த 10-ம் தேதி அமெரிக்காவின் யூட்டா மாகாணம், ஓரமில் உள்ள யூட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சார்லி கிக் பங்கேற்றபோது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக ஃபாக்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ட்ரம்ப், “சார்லி கிக்கை கொலை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். சார்லி கிக்குக்கு நெருக்கமானவராக இருந்தவரே, அவரை கொலை செய்துள்ளார். அவர்தான் குற்றவாளி என்பது நிரூபணமாகும் என்று நம்புகிறேன். அவருக்கு மரண தண்டனை கிடைக்கும் என்றும் நம்புகிறேன். சார்லி கிக் மிகச் சிறந்த நபர். அவருக்கு இவ்வாறு நேர்ந்திருக்கக் கூடாது. அவர் மிகவும் கடினமாக உழைத்தார். எல்லோரும் அவரை விரும்பினார்கள். அவர் எனது மகனைப் போன்றவர்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சார்லி கிக்கின் கொலை குறித்து ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், “சார்லி கிக்கின் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறேன். கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது என் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினேன். இடதுசாரி அரசியல் வன்முறை அதிகரித்து வருகின்றன. இந்த வன்முறையால் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர். இதை தடுத்து நிறுத்த வேண்டும். அமெரிக்க நீதிபதிகள், பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் வலதுசாரி சிந்தனை கொண்டவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்திருந்தார்.