சென்னை: அரசுப் பள்ளிகளில் திறன் திட்டத்தில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுக்கு தனி வினாத்தாள்களை தயாரித்து வழங்குவதற்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ் ஆகியோர் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: ”மாநில பாடத்திட்டத்தில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திறன் திட்டம் சிறப்பாக செயல்படுவதற்கான பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த திட்டத்தில் அடையாளம் காணப்பட்ட மாணவர்களுக்காக வரவுள்ள காலாண்டுத் தேர்வுகளில் திறன் பாடப் புத்தகம் சார்ந்து வினாத்தாள்கள் தயாரித்து வழங்கப்படவுள்ளன.
அந்த வகையில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான வினாத் தாள்கள் அடிப்படை கற்றல் விளைவுகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகின்றன. இந்த வினாத் தாள்களின் மொத்த மதிப்பெண்கள், வழக்கமான காலாண்டுத் தேர்வு வினாத் தாள்களின் மதிப்பெண்களுக்கு சமமாக இருக்கும். இது தவிர பயிற்சி நோக்கத்துக்காக அறிவியல், சமூக அறிவியல் மாதிரி வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்யுமாறு வழங்கப்படுகின்றன.
காலாண்டு தேர்வுக்கான அனைத்து வினாத்தாள்களும் என்ற தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். அதற்கான கால அட்டவணை தரப்பட்டுள்ளது. எனவே, திறன் திட்டத்தில் அடையாளம் காணப்பட்ட மாணவர்களுக்கு பாடவாரியாக வினாத்தாள்கள் வழங்கப் பட்டு காலாண்டுத் தேர்வுகள் தடையின்றி நடைபெறும் வகையில் தேவையான ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும்” என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.