சென்னை: மருத்துவத் துறையில் இந்தியாவுக்கு தமிழகம்தான் வழிகாட்டி என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் காப்பீடு திட்டத்தின் மூலம், 50-க்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்த வகையில், இதன் வெற்றியைக் கொண்டாடும் நிகழ்ச்சி அப்போலோ மருத்துவமனை சார்பில், சென்னை கிண்டியில் நேற்றுநடந்தது. இதில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு அப்போலோ மருத்துவர்களைப் பாராட்டினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது: தமிழகத்தில் அப்போலோ போன்ற தனியார் மருத்துவமனைகளில் அரசின் மருத்துவ சேவைகள் ஏழை, எளிய மக்களுக்கு முதல்வர் காப்பீடு திட்டத்தின் மூலம் தொடர்ந்து கிடைத்து வருகிறது. 2009-ம் ஆண்டு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டது.
இந்த திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்குப் பிறகு, மத்திய அரசின் மருத்துவத் துறை அலுவலர்கள், இந்திய அளவில் இத்திட்டத்தை செயல்படுத்த பிரதமர் விரும்புகிறார் எனக் கூறினர். அதைத் தொடர்ந்து, 2018-ம் ஆண்டு முதல் இந்தியா முழுவதும் பிரதமர் காப்பீடு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இதேபோல், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் குறித்து டெல்லியில் மருத்துவத்துறை சார்பில் நடந்த கூட்டம் ஒன்றில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் கேட்டுக் கொண்டதற் கிணங்க அனைத்து மாநில அமைச்சர்களுக்கும் விளக்கினேன். அப்போது, இத்திட்டத்தையும் இந்தியா முழுவதும் செயல்படுத்த இருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
இதேபோல், சமீபத்தில் தமிழகம் வந்த மத்திய சுகாதாரத் துறை அலுவலர்கள், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48’ திட்டம் செயல்பாடு குறித்து விளக்கங்களைக் கேட்டனர். அந்த வகையில், இந்த திட்டத்தைப் பின்பற்றி மத்திய அரசும் ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறது. மருத்துவ துறையில் தமிழகம்தான் இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருந்து வருகிறது.
தமிழகத்தில் 1.47 கோடி குடும்பங்கள் காப்பீடு திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றன. 1,450 சிகிச்சைகளுக்கு மட்டுமே இத்திட்டத்தில் காப்பீடு தொகை வழங்கப்பட்டு கொண்டிருந்த நிலையில், தற்போது 2,053 சிகிச்சைகளாக உயர்த்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை செயலர் பி.செந்தில்குமார், மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தின் உறுப்பினர் செயலர் என்.கோபாலகிருஷ்ணன், அப்போலோ மருத்துவமனை இயக்குநர் சிந்தூரி ரெட்டி, மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை துறை தலைவர் இளங்குமரன், அப்போலோ சென்னை மண்டல தலைமை நிர்வாக அதிகாரி இளங்குமரன் கலியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.