சென்னை: கல்லூரி மாணவரை கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் திமுக பிரமுகரின் பேரனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. காதல் தகராறில் சென்னை அயனாவரத்தை சேர்ந்த நிதின்சாய் என்ற கல்லூரி மாணவரை, கார் ஏற்றி கொலை செய்ததாக திமுக பிரமுகரும், சென்னை மாநகராட்சி மண்டல தலைவருமான கே.கே.நகர் தனசேகரனின் பேரன் சந்துரு கைது செய்யப்பட்டார்.
கல்லூரி மாணவரான அவருக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் 2 முறை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், அவருக்கு ஜாமீன் கோரி மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சந்துரு தரப்பில், “காரில் சந்துரு சென்றாரே தவிர, காரை அவர் ஓட்டவில்லை.
கல்லூரி மாணவர் என்பதை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும்” என்று வாதிடப்பட்டது. இதற்கு அரசு தரப்பு ஆட்சேபம் தெரிவித்தது. இதையடுத்து நீதிபதி, “குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்துரு ஏற்கெனவே 45 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் இருந்துள்ளதாலும், கல்லூரி மாணவர் என்பதாலும் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது.
அவர் ரூ.10 ஆயிரம் மற்றும் அதே தொகைக்கான இருநபர் ஜாமீன் உத்தரவாதம் அளிக்க வேண்டும். மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். சாட்சிகளை கலைக்க கூடாது” என்று நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.