புதுடெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் எம்.பி.க்கள் சிலர் அணி மாறி வாக்களித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே கூறுகையில், “குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ரகசிய வாக்கெடுப்பு என்றால், அதில் யார் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை எப்படி அறிய முடியும்? எந்த கட்சியின் ஓட்டுக்கள் பிரிந்தது என எனக்கு தெரியாது? இதற்கு மகாராஷ்டிரா என்ன செய்ய முடியும்?” என்றார்.
சிவ சேனா உத்தவ் அணி எம்.பி அர்விந்த் சாவந்த் கூறுகையில், ‘‘செல்லாத ஓட்டு போட்ட எம்.பி.க்கள் எல்லாம் படித்தவர்களா? அல்லது முட்டாள்களா? அவர்கள் மனசாட்சிப்படிதான் வாக்களித்தார்களா? அல்லது விலைக்கு வாங்கப்பட்டார்களா? அவர்கள் வேண்டும் என்றே தவறாக வாக்களித்துள்ளனர். எல்லா முகமைகளும் பா.ஜ.கவின் அடிமைகள்’’ என்றார்.
காங்கிரஸ் கட்சியின் மணீஷ் திவாரி கூறுகையில், ‘‘குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், எம்.பி.க்கள் சிலர் அணி மாறி வாக்களித்து இருந்தால், அது குறித்து இண்டியா கூட்டணி கட்சிகள் விசாரணை நடத்த வேண்டும். இது போல் அணி மாறி வாக்களிப்பது மிகப் பெரிய நம்பிக்கை மோசடி. இது அணிக்குள் ஒற்றுமை குறித்து கேள்வி எழுப்புகிறது’’ என்றார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவும் மறுப்பு தெரிவித்துள்ளார்.