சென்னை: ஜிஎஸ்டி குறைப்பின் பயன்கள் நுகர்வோரை சென்றடைய வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ஜிஎஸ்டி 4 அடுக்கு வரியாக விதிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு மிகப்பெரும் சுமையாக மாறியிருந்தது. இந்நிலையில் பிரதமர் அறிவித்தபடி வரி சீர்திருத்தம் மூலம், ஈரடுக்கு வரியாக மாற்றி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரியதே. ஆனாலும், இந்த வரி குறைப்பு பொதுமக்களையும், நுகர்வோரையும் சென்றடைய வேண்டும்.
அதீத வரி விதிப்பால் அடித்தட்டு, நடுத்தர நுகர்வோர் பயன்பெற முடியாத நிலைமையை கருத்தில் கொண்டு, பல்வேறு பொருட்களுக்கு வரிச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி, தயாரிப்பாளர்கள் மற்றும் கார்ப்பரேட் கம்பெனிகள், விற்பனை விலையை கூட்டி, மத்திய அரசு அறிவித்துள்ள வரிக்குறைப்பு நுகர்வோரை சென்றடையாத நிலையை தயாரிப்பாளர்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் உருவாக்குவதாக தகவல்கள் வருகின்றன.
இதன்மீது மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து, இந்த வரிகுறைப்பு நடவடிக்கை நுகர்வோரையும், பயனாளர்களையும் சென்றடையும் வகையில், அரசின் நிலைப்பாட்டை உறுதி செய்து, நுகர்வோர் நலனை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.