மதுரை: நாமக்கல் சிறுநீரக திருட்டு சம்பவத்தால் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: என் சிறுநீரகங்கள் பழுதானதால், மாற்று சிறுநீரகங்கள் பொருத்த அனுமதி கோரி பல மாதங்களுக்கு முன்பு விண்ணப்பித்தேன். எனினும், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான குழு இதுவரை அனுமதி வழங்கவில்லை.
இதனால்என் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு விரைவில் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் வழக்கறிஞர் வாதிடும்போது, “தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக சிறுநீரக திருட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்து உள்ளது.
இதனால் மனுதாரருக்கு சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மனுதாரரைப்போல, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி கோரிய வழக்கில் 4 வாரங்களில் அனுமதி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி மனுதாரருக்கு விரைவாக உறுப்பு மாற்று சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும்” என்றார். பின்னர் நீதிபதி, “மனுதாரருக்கு 23 வயதாகிறது. அவரது 2 சிறுநீரகங்களும் பழுதடைந்துள்ளன. இதனால் அவரது தாயாரிடம் இருந்து சிறுநீரகம் தானமாகப் பெற்றார். எதிர்பாராத வகையில் அந்த சிறுநீரகமும் பழுதானது.
தற்போது மனுதாரர் டயாலிசிஸ் சிகிச்சை மூலம் உயிருடன் வாழ்கிறார். தற்போது மனுதாரரின் தோழி ஒருவர் சிறுநீரக தானம் வழங்க முன்வந்துள்ளார். எனவே, மனுதாரரின் விண்ணப்பம் மற்றும் ஆவணங்களை 8 வாரங்களில் பரிசீலித்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள அங்கீகாரம் வழங்கும் குழு முடிவெடுக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.