Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»இந்தியாவிடம் திடீரென இறங்கி வரும் ட்ரம்ப் – பின்னணியில் அச்சமா, ராஜதந்திரமா?
    உலகம்

    இந்தியாவிடம் திடீரென இறங்கி வரும் ட்ரம்ப் – பின்னணியில் அச்சமா, ராஜதந்திரமா?

    adminBy adminSeptember 10, 2025No Comments5 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இந்தியாவிடம் திடீரென இறங்கி வரும் ட்ரம்ப் – பின்னணியில் அச்சமா, ராஜதந்திரமா?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    “வரி விவகாரத்தில் இனி இந்தியாவுடன் பேசுவதற்கு ஒன்றுமில்லை. நாங்கள் 50% வரி விதித்த பின்னர் அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா ஜீரோ வரி என்கிறது. காலம் கடந்த அறிவிப்பு இது” என்றெல்லாம் கூறிவந்த ட்ரமப் திடீரென ஞானோதயம் பிறந்ததுபோல் ஒரு ‘பல்டி’ பதிவைப் பகிர்ந்துள்ளார்.

    அதில் அவர், “இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தகத் தடைகளை நீக்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். வரும் வாரங்களில் எனது நல்ல நண்பரான மோடியுடன் பேசுவதை நான் எதிர்நோக்கியுள்ளேன். இரு பெரிய நாடுகளுக்கும் வர்த்தக பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படுவதில் எவ்வித சிக்கலும் இருக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று கூறியிருந்தார்.

    இதற்கு, பிரதமர் மோடியும் ”இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நட்பு நாடுகள். இயல்பான கூட்டாளிகள். நமது வர்த்தகப் பேச்சுவார்த்தை நம் இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லையற்ற திறன்களை கண்டெடுப்பதற்கு மிகுந்த உதவியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அதிபர் ட்ரம்ப்புடன் பேசுவதை நானும் எதிர்நோக்கியுள்ளேன். இரு நாட்டு மக்களுக்கும் வளமான, பிரகாசமான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க நாம் உழைப்போம்” என்று பதிலளித்துள்ளார்.

    முன்னதாக, பிரதமர் மோடியை டொனால்டு ட்ரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொள்ள 3 முறை முயற்சித்தார். ஆனால் மோடி பேசவில்லை என்ற தகவல் வந்தது. இந்தச் சூழலில் இரு தினங்களுக்கு முன்னர் கூட, “நான் எப்போதும் மோடியுடன் நண்பராக இருப்பேன். அவர் ஒரு சிறந்த பிரதமர்” என்று கூறியிருந்தார்.

    அதிபர் டொனால்டு ட்ரம்ப், அவரது ஆலோசகர் பீட்டர் நவேரா என மாறி மாறி இந்தியாவை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், ட்ரம்ப்பின் சமீபத்திய பேச்சுகள், பதிவுகள் அவர் இந்தியாவிடம் இறங்கி வருவதற்கான ‘சிக்னல்’களைத் தருகின்றன. இதுபற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

    ட்ரம்ப்பின் திடீர் பணிவுக்கு மூன்று பிரதானக் காரணங்களைப் பட்டியலிடலாம். 1.ரஷ்யாவிடம் இந்தியா அதிதீவிரமாக நெருங்கிவருவது. 2. சீனாவுடனான உறவு. அதுவும் குறிப்பாக எதிரும் புதிருமாக இருந்த சீனாவில் மோடிக்கு கிடைத்த வரவேற்பு. 3. பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுவிடாமல் அரசு மேற்கொண்ட ஜிஎஸ்டி விதிப்பில் மாற்றம்.

    1. இந்தியா – ரஷ்யா உறவு 70 ஆண்டு கால வரலாறு கொண்டது எனலாம். இரு நாடுகளுக்கும் இடையே எண்ணெய் வர்த்தகம், அணுசக்தி துறை, விண்வெளித் துறை, பாதுகாப்புத் துறை எனப் பல்வேறு துறைகளிலும் உறவு உண்டு. ஆனால், சமீப காலமாக ரஷ்ய உறவுக்காக இந்தியாவை அமெரிக்கா கடிந்துகொள்ள காரணம் உக்ரைன் போர். அந்தப் போரை 10 நாட்களில் முடிவுக்குக் கொண்டு வருவேன் என்று சூளுரைத்த ட்ரம்ப்புக்கு சற்றும் அசைந்து கொடுக்காமல் சவால் விட்டுக் கொண்டிருக்கிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.

    ரஷ்யாவுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பலவும் மிகப் பெரிய அளவிலான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. ஆனால், இந்தியா உக்ரைன் போருக்குப் பின்னர் ரஷ்யாவிடமிருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்குகிறது. இதுவே அந்நாட்டுக்கு பொருளாதார பலத்தைத் தருகிறது. அந்த வகையில் இந்தியா போரை ரஷ்யா நீட்டிக்க மறைமுகமாக உதவுகிறது என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டு. இது வெளிப்படையான குற்றச்சாட்டு என்றாலும் கூட, தங்கள் நாட்டின் ராணுவ பலம் மூலம் ஆதிக்கம் செலுத்த முடியாத நாடுகள் மீது பொருளாதார நடவடிக்கைகள் மூலம் அடிபணிய வைக்கும் ட்ரம்ப்பின் உத்திதான் அதீத வரிவிதிப்பு என்ற தியரியும் உண்டு. அது, இந்தியாவிடம் எடுபடாமல் போனது கண்கூடு.

    2. சீனாவுடனான இந்தியாவின் திடீர் நெருக்கமும் ட்ரம்ப் இறங்கி வருவதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டு நாடுகள் இந்தியாவும் சீனாவும். அதேபோல் டாப் 5 பொருளாதாரத்திலும் 2 நாடுகளும் இருக்கின்றன. சீனாவிடம் இந்தியா பல்வேறு மூலப் பொருட்களுக்காக சார்ந்திருக்கிறது. மலிவான உற்பத்தியால் சீனாவும் இந்திய சில்லறை சந்தையில் ஆதிக்கம் செலுத்துகிறது. இதன் நிமித்தமாக இந்தியா உள்நாட்டு உற்பத்திகள் பாதிக்கப்படக் கூடாது என்று பல்வேறு கெடுபிடிகளை விதித்திருப்பது இன்னொரு தனிக்கதை.

    ஆனால், அடிக்கடி எல்லைப் பிரச்சினை ரீதியாக இந்தியாவுடன் மோதிக் கொள்ளும் சீனா அண்மையில் ஜின்ஜியாங் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் மட்டும் இந்தியாவுடன் அதிக நெருக்கம் காட்டியது. சீன அதிபரின் காரில் மோடி பயணித்தது. மோடியை பற்றி சீன சமூக வலைதளங்களில் அதிகமாக தேடப்பட்டது என்று ஒரு நல்லுறவு அரும்பியுள்ளது. சர்வதேச அரசியலில் சீனா – இந்தியா நல்லுறவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    அமெரிக்காவிடமிருந்து இந்தியா சற்றே விலகியதற்கு, பாகிஸ்தானுடன் ட்ரம்ப் அரசு காட்டிவரும் நெருக்கம் மிக முக்கியக் காரணம். அதேபோல் இந்தியாவின் பக்கம் சீனா திரும்ப முக்கியக் காரணம், பாகிஸ்தானில் சீனா மேற்கொண்ட முதலீடுகள். அதுவும் குறிப்பாக பெல்ட் அண்ட் ரோடு திட்டம்.

    சீன அதிபர் ஜி ஜின்பிங் 2013-ம் ஆண்டு பெல்ட் அண்ட் ரோடு (பிஆர்) திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் ஆசிய நாடுகளுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே சீனா சாலை போக்குவரத்தை ஏற்படுத்தும். அதேபோல் கடல் வழியே போக்குவரத்தை ஏற்படுத்தி சீனாவில் இருக்கும் துறைமுகங்களை உலகில் இருக்கும் பிற துறைமுகங்கள் உடன் இணைக்கும். இதுதான் தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative) திட்டம் ஆகும். இதில் பாகிஸ்தானை பிரதானமான பொசிஷனாக சீனா கருதுகிறது. இதற்கு கைமாறாக சீனா பாகிஸ்தானுக்கு பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறது. உட்கட்டமைப்பு மேம்பாடு முதல் நிதியுதவி வரை இது தொடர்கிறது.

    இந்தச் சூழலில் அமெரிக்காவுடன் பாகிஸ்தான் அதிகமாக நெருங்க, சீனாவின் பார்வையோ இந்தியா மீது திரும்பியுள்ளது. சுய லாபத்துக்காகவும், ஆசிய புவி அரசியலில் முக்கியத்துவம் பெறவும் இந்த நெருக்கம் காட்டப்படுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதேவேளையில், சீனா ஒருபோதும் இந்தியாவுக்கு எல்லாவிதத்தில் இணக்கமாக இருந்துவிடாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.

    இதேபோல் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இந்தியா – ரஷ்யா – சீனா வலுவான கூட்டாளிகளாக வருகிறது. இதன் வலிமை ஜி-7-க்கு சவால் விடக்கூடிய அளவில் உருவாவதால் இதுவும் ட்ரம்ப்புக்கு சற்றே கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்று சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். இதன் விளைவாகவே சீனாவிடம் ரஷ்யா, இந்தியாவை இழந்துவிட்டோம் போன்ற புலம்பல்களும் எழுந்தன.

    3. கடைசியாக, இந்தியா அண்மையில் ஜிஎஸ்டியில் மிகப் பெரிய சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தது. இது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட, “ஜிஎஸ்டி குறைப்பு, நாட்டில் நுகர்வு அதிகரிக்க உதவும். இதன் மூலம் இந்த நிதியாண்டின் இறுதியில் எந்த பாதிப்பும் இருக்காது. தற்போது எனது கவனம் முழுவதும் வரி குறைப்பு மாற்றத்துக்கு மாறுவதை உறுதி செய்வதில்தான் இருக்கும். அமெரிக்காவின் வரி விதிப்பால் ஏற்படும் பாதிப்பை இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறைக்கும்” எனக் கூறியிருந்தார். ஆனால், முழுக்க முழுக்க அமெரிக்க வரி விதிப்பை சமாளிக்கவே இந்த வரி குறைப்பு என்ற விமர்சனங்களை மறுத்தார். இந்த வரி குறைப்பு நடவடிக்கையும் அமெரிக்காவுக்கு ஜெர்க் கொடுத்துள்ளது என்று கூறப்படுகிறது.

    இந்தப் பின்னணியில்தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியாவுடனான உறவு முக்கியம், மோடி எனது நண்பர், இரு நாட்டு வர்த்தக தடைகளை தகர்க்கும் பேச்சுவார்த்தை நடக்கிறது என்றெல்லாம் கூறிவருகிறார்.

    ஆனால், ட்ரம்ப் முழுக்க முழுக்க ‘படுத்தேவிட்டார்’ என்றெல்லாம் கூற முடியாது. அவருடைய நகர்வுகள் மிக நுணுக்கமானவையாகவே இருக்கும். ஒரு மிகப் பெரிய தொழிலதிபர், உலகின் சூப்பர் பவரின் அதிபராக இருந்தால் அது என்ன மாதிரியான காம்போவை ஆட்சி நிர்வாகத்தில் ஏற்படுத்தும் என்பதற்கான சரியான உதாரணம்தான் ட்ரம்ப் என்று எச்சரிக்கும் நிபுணர்கள், அவர் ஒருபுறம் சமரசம் பேசிக்கொண்டே, மறுபுறம் இந்தியாவுக்கான குடைச்சலை ஏற்பாடு செய்வார் என்கின்றனர்.

    தான் விதித்த வரி போதாது என ஐரோப்பிய யூனியன் நாடுகளும் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனாவுக்கு 100 சதவீத இறக்குமதி வரி விதிக்க தூண்டி விடுவதாக தகவல்கள் வருகின்றன. ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கவே இந்த நகர்வு என்றாலும், இந்தியாவுக்கும் இது ஒரு வேகத்தடையாக அமையும். அமெரிக்கா – ஐரோப்பிய யூனியன் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் தொலைபேசி வழியாக பேசிய ட்ரம்ப், இந்த 100% இறக்குமதி வரி பற்றி பேசியதாக தகவல்கள் கசிந்துள்ளன. முதற்கட்டமாக சீனா மீது இந்த வரி விதிப்பை அமல்படுத்துவது பற்றி ஐரோப்பிய யூனியன் நாட்டுகள் ஆரம்பக்கட்ட ஆலோசனையில் இறங்கிவிட்டதாகவும் தெரிகிறது.

    இது​வரை இந்​தி​யா – பாகிஸ்​தான் போர் உட்பட 7 போர்​களை நிறுத்​தி​யுள்​ளேன் என்று கூறிவரும் ட்ரம்ப்புக்கு உக்ரைன் போரை நிறுத்துவது அவரது ‘சூப்பர் பவரை’ சர்வதேச அரங்கில் உறுதிப்படுத்தும் முயற்சி மட்டுமல்ல, அமைதிக்கான நோபல் பரிசு தன்னை வந்தடைய வேண்டும் என்ற பிரயத்தனமும் கூட. இதன் பின்னணியில் தான் ட்ரம்ப்பின் மிரட்டல்கள், சலுகைகள், சமரசங்கள், விட்டுக் கொடுத்தல்கள் என எல்லாம் நீள்கிறது.

    மொத்தத்தில் அமெரிக்கா Vs இந்தியா, சீனா, ரஷ்யா போட்டி ஒரு சர்வதேச தரத்திலான கிராமத்து திண்ணையில் ஆடப்படும் ஆடு புலி ஆட்டம் எனலாம்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    யார் லாரி எலிசன்: 393 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிகர மதிப்புள்ள உலகின் பணக்காரர் | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 10, 2025
    உலகம்

    இயல்பு நிலைக்கு திரும்பும் நேபாளம் – மீண்டும் செயல்பட தொடங்கிய காத்மாண்டு விமான நிலையம்

    September 10, 2025
    உலகம்

    பிரான்ஸில் தொடங்கிய ‘அனைத்தையும் தடுப்போம்’ போராட்டம் – 200 பேர் கைது

    September 10, 2025
    உலகம்

    கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதலில் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை: ட்ரம்ப் திட்டவட்டம்

    September 10, 2025
    உலகம்

    சர்வதேச விமான நிலையம் மூடல்; உச்ச நீதிமன்ற விசாரணை ரத்து: ராணுவ கட்டுப்பாட்டில் நேபாளம்

    September 10, 2025
    உலகம்

    இந்தியாவின் நியாயமற்ற வர்த்தகம் அமெரிக்காவுக்கு தேவையில்லை: பீட்டர் நவரோ

    September 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உலக செல்வந்தர் பட்டியல்: எலான் மஸ்க்கை முந்திய லேரி எலிசன்!
    • உத்தரகண்ட் பஹாதி ராஸ்: நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆரோக்கியத்திற்கான இமயமலை டிஷ் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உலகின் பணக்காரர் லாரி எலிசனின் ஐந்தாவது மனைவி அவரை விட 47 வயது இளையவர்: அவரது ஆரம்பகால திருமணங்கள் மற்றும் சிறிய அறியப்படாத கூட்டாண்மை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வாழை தலாம் மற்றும் வினிகரை கலப்பது தோட்டக்கலை, சுத்தம் மற்றும் ஆரோக்கியத்திற்கு ஏன் நல்லது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 4.3 ஓவர்களில் இலக்கை எட்டி அமீரகத்தை எளிதில் வென்ற இந்தியா | ஆசிய கோப்பை கிரிக்கெட்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.