புதுடெல்லி: நாட்டின் 2-வது பெரிய அரசியலமைப்பு பதவியாக குடியரசுத் துணைத் தலைவர் பதவி உள்ளது. அவருக்கு ஊதியம் என்ற பெயரில் நிலையான தொகை அளிக்கப்படா விட்டாலும், சலுகைகள் உள்ளிட்டவற்றின் மூலம் ரூ.4 லட்சம் அளவுக்கு கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.
அதேநேரத்தில் குடியரசுத் துணைத் தலைவராக இருப்பவர், குடியரசுத் தலைவர் (பொறுப்பு) பதவியில் இருந்தால் அவருக்கு குடியரசுத் தலைவருக்கு வழங்கப்படும் ஊதியம் வழங்கப்படும்.
மேலும், குடியரசு துணைத் தலைவருக்கு அரசு சார்பில் தங்குமிட வசதி (மிகப்பெரிய பங்களா), மருத்துவ நல உதவிகள், ரயில் அல்லது விமான பயணங்களுக்கு கட்டணம், செல்போன், வயர் இணைப்புள்ள போன்களுக்கு கட்டணம், தனிநபர் பாதுகாப்பு அதிகாரிகள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படும்.
மேலும், குடியரசு துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெறும்போது அவருக்கு மாதம்தோறும் ரூ.2 லட்சம் பென்ஷனாகக் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் டெல்லியில் டைப்-8 வகை பங்களா, அந்தரங்க செயலர் உள்ளிட்ட ஊழியர்கள், கூடுதல் செயலர், தனி உதவியாளர், டாக்டர், நர்ஸ், 4 உதவியாளர்கள் ஆகிய சலுகைகள் வழங்கப்படும்.
குடியரசு துணைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற பின்னர் உயிரிழந்துவிட்டால், அவரது மனைவிக்கு டெல்லியில் டைப்-7 வகையிலான வீடு அவரது வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும் என்று குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.