கோவை: டெல்லியில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்துப் பேசியது அதிமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்கும் முயற்சியை 10 நாட்களில் தொடங்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கெடு விதித்தார்.
இதைத் தொடர்ந்து, அவரிடம் இருந்த அமைப்புச் செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆகிய பதவிகளை பறித்து பழனிசாமி நடவடிக்கை எடுத்தார். இந்நிலையில், செங்கோட்டையன் நேற்று முன்தினம் காலை கோவையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.
ஹரித்வார் செல்வதாக கூறிச்சென்ற அவர், திடீரென டெல்லி சென்று மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், நேற்று மதியம் டெல்லியில் இருந்து கோவை திரும்பிய செங்கோட்டையன், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் ஹரித்வார் செல்கிறேன் என கூறிவிட்டுச் சென்றேன்.
டெல்லி சென்றவுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க அனுமதி கிடைத்தது. இதையடுத்து, அமித்ஷாவையும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்தேன். இன்றைய அரசியல் சூழல் குறித்து கருத்துகள் பரிமாற்றம் செய்யப்பட்டன.
அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதிமுக வலிமை பெற வேண்டும் என்ற நோக்குடன், அவர்களிடம் பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்தோம். இந்த கருத்துகளின் அடிப்படையில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொருவருக்கும் ஜனநாயக உரிமை இருக்கிறது என்ற அடிப்படையில், இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் அவரவர் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இது வரவேற்கத்தக்கது.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும்போது, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அங்கே வந்தார். அவரிடம், ஈரோட்டில் இருந்து சென்னை புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் தற்போது முன்கூட்டியே புறப்பட்டுச் செல்வதால், பொதுமக்கள், வியாபாரிகள், மாணவர்கள் செல்வதற்கு கடினமாக இருக்கிறது. அதிகாலை 3 மணிக்கே சென்னை சென்று விடுகிறது.
அந்த நேரத்தை மாற்றினால் உதவியாக இருக்கும் என்று கோரிக்கை விடுத்தேன். இதை பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார். பாஜகவின் அணுகுமுறை மாற்றத்தால் அதிமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.