சென்னை: புச்சி பாபு கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் டிஎன்சிஏ பிரெஸிடெண்ட் லெவன் – ஹைதராபாத் அணிகள் விளையாடின. சென்னையில் உள்ள சிஎஸ்கே உயர் செயல் திறன் மையத்தில் நடைபெற்று வந்த இந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்களும், டிஎன்சிஏ பிரெஸிடெண்ட் லெவன் 353 ரன்களும் எடுத்தன.
23 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஹைதரபாத் அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 70 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. வருண் கவுட் 56, ராகுல் ராதேஷ் 31 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டிஎன்சிஏ பிரெஸிடெண்ட் லெவன் அணி சார்பில் வித்யுத், ஹெம்சுதேஷன் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.
முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றி பெற்ற ஹைதராபாத் அணிக்கு டிஎன்சிஏ தலைவர் அசோக் சிகாமணி கோப்பையை வழங்கினார். நிகழ்ச்சியில் கவுரவ பொருளாளர் ஸ்ரீனிவாசராஜ், கவுரவ செயலாளர் ஆர்.ஐ.பழனி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் சிங், போட்டி அமைப்பாளர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.புச்சி பாபு கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்ற ஹைதராபாத் அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது.
கால் இறுதியில் நிகத் ஜரீன்: இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 51 எடை பிரிவில் இந்தியாவின் நிகத் ஜரீன், ஜப்பானின் 21 வயதான யுனா நிஷினகாவை எதிர்த்து விளையாடினார். இதில் நிகத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். 29 வயதான நிகத் ஜரீன் கால் இறுதி சுற்றில், ஒலிம்பிக்கில் இரு முறை வெள்ளிப் பதக்கம் வென்றவரும் 2022-ம் ஆண்டு உலக லைட் ஃப்ளைவெயிட் சாம்பியனுமான துருக்கியின் பஸ் நாஸ் ககிரோக்லுவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.
சாட்விக்-ஷிராக் ஜோடி வெற்றி: ஹாங் காங் ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேறியது. ஹாங் காங்கில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி, தைவானின் சியு சியாங் சீ, வாங் சி-லின் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் சாட்விக்-ஷிராக் ஜோடி 21-13, 18-21, 21-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.
பிப்ரவரி 7-ல் டி 20 உலகக் கோப்பை?– ஆடவருக்கான டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. உலகளாவிய இந்த தொடருக்கு இதுவரை 15 அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில் டி 20 உலகக் கோப்பை தொடர் 2026-ம் ஆண்டு பிப்ரவரி 7-ல் தொடங்கி மார்ச் 8 வரை நடைபெறக்கூடும் என உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையில், பாகிஸ்தான் அணி பங்கேற்கும் ஆட்டங்கள் நடைபெறும். இந்தியாவில் 5 மைதானங்களிலும், இலங்கையில் 2 மைதானங்களிலும் போட்டிகள் நடைபெறக்கூடும்.
போட்டியில் பங்கேற்கும் 20 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்படும். லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றில் பலப்பரீட்சை நடத்தும். இதில் இருந்து4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். இறுதிப் போட்டி உட்பட மொத்தம் 55 ஆட்டங்களை உள்ளடக்கியதாக உலகக் கோப்பை தொடர் இருக்கும்.