காஞ்சிபுரம் செவிலிடுமேடு பகுதியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா வெளிப்புறத்தில் பளபளப்பாக ஜொலிக்கும் நிலையிலும், உள்புறத்தில் புதர் மண்டிய நிலையிலும் உள்ளது. இந்த பூங்காவை முறையாக பாமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் மொத்தம் 68 பூங்காக்கள் உள்ளன. இவற்றில் சுமார் 20 பூங்காக்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ளன. இவ்வாறு பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ள பூங்காக்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
செவிலிமேடு, 4-வது மண்டலம், வார்டு எண் 43 சம்பந்தமூர்த்தி நகரில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த பூங்கா வெளிப்புறத்தில் புதிதுபோல் உள்ளது. ஆனால் பூங்காவின் உள்புறம் புதர் மண்டிய நிலையில் உள்ளது. கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இந்த பூங்காவை மாநகராட்சி முறையாக பராமரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கல் வலியுறுத்துகின்றனர்.
இது குறித்து அந்த பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வி.வெங்கேடசன் கூறுகையில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா இந்த பகுதியில் அமைக்கப்பட்டு 3 வருடங்கள்தான் ஆகிறது. ஆனால் இந்த பூங்கா முறையாக பராமரிக்கப்படவில்லை. பொதுமக்கள் உட்காரும் இடங்களில் எருக்கஞ்செடிகள் முளைத்தும், புதர் மண்டிய நிலையிலும் உள்ளது. இந்த பூங்காவை பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

உள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா.
இது குறித்து மேலும் சிலர் கூறுகையில் இந்த கலைஞர் நூற்றாண்டு பூங்கா மட்டுமல்ல அண்ணா நூற்றாண்டு பூங்கா, புதிய நகர்களில் பூங்காவுக்கு இடம் ஒதுக்கப்பட்டு நகராட்சியிடம் ஒப்படைக்கப்படும் பூங்கா என பல்வேறு பூங்காக்கள் முறையான பராமரிக்கில்லாமல் கிடக்கின்றன. சில பூங்காக்கள் முற்றிலும் பராமரிக்கப்படாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளன.
இது குறித்து மாநகராட்சி அலுவலர்கள் சிலரிடம் கேட்டபோது பூங்காக்களை மாநகராட்சியில் இருக்கும் நிதியை கொண்டு பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பூங்காக்கள் பராமரிக்கப்படுகின்றன. சிறு பூங்காக்களை பராமரிக்க அதிக நிதி தேவைப்படுகிறது. அந்த நிதியை அரசிடம் இருந்து கேட்டு பெற்றுதான் பராமரிக்க முடியும். அதேபோல் பூங்காவில் சமூக விரோ திகளின் நடமாட்டம் இருந்தாலோ, பூங்காவுக்கு வரும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினாலோ அவர்கள் மீது காவல்துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.