சென்னை: ‘டெட்’ தேர்வுக்கு இதுவரை 3 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்று (புதன்) மாலை 5 மணிக்கு முடிவடைகிறது.
மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி இடைநிலை ஆசிரியர்கள் ‘டெட்’ தாள்-1 தேர்விலும், பி.எட் முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் ‘டெட்’ தாள்-2-லும் தேர்ச்சி பெற வேண்டும். 2025-ம் ஆண்டுக்கான ‘டெட்’ தேர்வு நவ.15 மற்றும் 16-ம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஆக.11-ம் தேதி தொடங்கியது. விண்ணப்பிக்க கடைசி தேதி செப்.8-ம் தேதி முடிவடைய இருந்த நிலையில், விண்ணப்பதாரர்களின் வேண்டுகோளை ஏற்று கடைசி தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் செப்.10-ம் தேதி (இன்று) மாலை 5 மணி வரை நீட்டித்தது. இந்நிலையில், நேற்று காலை நிலவரப்படி 3 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ‘டெட்’ தேர்வுக்கு விண்ணப்பித்திருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
‘டெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆசிரியர்கள் டிஆர்பி இணையதளத்தை (www.trb.tn.gov.in) பயன்படுத்தி இன்று மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். தற்போது இறுதி ஆண்டு இடைநிலை ஆசிரியர் பயிற்சி பயிலும் மாணவர்களும், பி.எட் 2-ம் ஆண்டு படிப்பவர்களும் ‘டெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வில் தேர்ச்சி பெறும் பட்சத்தில் அவர்கள் தங்கள் படிப்பை முடித்த பிறகு ‘டெட்’ தேர்ச்சி சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.