ராஜ்கிர்: பிஹார் மாநிலம் ராஜ்கிரில் ஆடவருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது.
இதன் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் நேற்று சீனாவுடன் மோதியது. இதில் இந்திய அணி 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் அபிஷேக் 2 கோல்கள் அடித்தார். சுக்ஜீத் சிங், ராஜ்குமார் பால், மன்தீப் சிங், தில்பிரீத் சிங், லக்ரா ஷில்லானந்த் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
இந்த வெற்றியின் மூலம் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா, கொரியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
கொரியா சூப்பர் 4 சுற்றில் தலா ஒரு வெற்றி, தோல்வி, டிராவுடன் 4 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்திருந்தது. இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறும்.