திரையரங்குகள் போஸ்டர்கள், பேனர்கள் வைக்க முடியவில்லை என்று நடிகர் பாலா வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
ஷெரிஃப் இயக்கத்தில் பாலா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘காந்தி கண்ணாடி’. இப்படத்தின் மூலமாக திரையுலகில் பாலா நாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். இதனால் பாலாவின் நண்பர்கள் பலரும் படத்தைப் பார்த்துவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
‘காந்தி கண்ணாடி’ படத்தின் முதல் காட்சியினை படக்குழுவினருடன் இணைந்து ராகவா லாரன்ஸும் கண்டுகழித்தார். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் பாலா பேசும் போது, “படம் வெளியாவதற்கு 3 நாட்களுக்கு முன்பு அவ்வளவு கஷ்டம். நிறைய திரையரங்குகளில் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்க முடியவில்லை.
மக்கள் வந்துவிட்டு இங்கு ‘காந்தி கண்ணாடி’ ஓடவில்லை போல என்று சென்றுவிடுகிறார்கள். அனைத்து தடைகளைத் தாண்டி படம் வெளியாகி இருக்கிறது. இன்று மக்களிடையே படத்துக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதற்கு தமிழக மக்களுக்கு நன்றி. நீ ஹீரோடா என்று சொல்லிக் கொண்டே இருப்பார் லாரன்ஸ் சார். இன்று திரையில் என்னை பார்க்கும் போது என்ன சொல்வதென்று தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார் பாலா.

