மதுரை: மதுரை மாவட்டத்தின் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நடந்த ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தில் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் அதிக அளவில் பங்கேற்றது அதிமுகவினருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
தமிழகத்தில் 2026-ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடை பெற உள்ளது. இதையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமி ழகம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ளார். மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரப் பயணத்தை கடந்த ஜூலை 7-ல் தொடங்கிய பழனிசாமி, இதுவரை 120-க்கும் மேற்பட்ட பேரவைத் தொகுதிகளில் பிரச்சாரம் செய்துள்ளார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இந்த மாதம் 23-ம் தேதி எழுச்சி பயணத்தை பழனிசாமி நிறைவு செய்கிறார்.
மதுரை மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. செப். 1-ல் திருப் பரங்குன்றம், திருமங்கலம் தொகுதிகளிலும், செப். 2-ல் மேலூர், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு தொகுதிகளிலும், செப். 3-ல் மதுரை மேற்கு, மதுரை மத்தி, மதுரை தெற்கு தொகுதிகளிலும், நேற்று சோழ வந்தான், உசிலம்பட்டி தொகுதிகளிலும் பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.
மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் அதிமுகவினரைப் போல் கூட்டணி கட்சியினரும் அதிக அளவில் திரண்டனர். குறிப்பாக பாஜகவினர் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றனர். பாஜக பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன், செயலாளர் கதலி நரசிங்க பெருமாள், மாவட்டத் தலைவர்கள் மாரி சக்கரவர்த்தி, ராஜசிம்மன், சிவலிங்கம் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். இதேபோல், தமிழ் மாநில காங்கிரஸ், பார்வர்டு பிளாக் கட்சியினரும் அனைத்து கூட்டங்களுக்கும் வந்திருந்தனர்.
பிரச்சாரக் கூட்டங்களில் பழனிசாமி பேசும்போது, கூட்டணி கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பார்வை யாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் பெயர்களை குறிப்பிட்டார். இந்த நான்கு நாள் பயணத்தின்போது பழனி சாமி 3 நாள் மதுரையில் தனியார் ஹோட்டலில் தங்கினார்.
அப்போது மதுரை பாஜக நிர்வாகிகள் பழனிசாமியை சந்தித்தனர். அவர், பாஜக நிர்வாகிகளை மகிழ்ச்சியுடன் வரவேற்று அவர்களுடன் புகைப் படங்களும் எடுத்துக் கொண்டார். பழனிசாமியின் இந்த நடவடிக்கை பாஜக உள்ளிட்ட அதிமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது.
மதுரையில் நடந்த பிரச்சாரப் பயணக் கூட்டங்களில் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றது, அதிமுக முக்கிய நிர்வாகிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாஜக நிர்வாகிகள் கூறுகையில், தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெற இரு கட்சியினரும் வேற்றுமைகளை கைவிட்டு ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். இதன் அடிப்படையில் பழனிசாமி பிரச்சாரக் கூட்டங்களில் பாஜகவினர் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என கட்சி மேலிடம் கூறி யிருந்தது.
அதன் அடிப்படையில் பழனிசாமியின் எழுச்சி பயணங்களில் பாஜகவினர் அதிகளவில் பங்கேற்றனர். இதனால் இரு கட்சிகளின் கூட்டணி மேலும் வலுவடைவதுடன், தேர்தல் வெற்றிக்கும் உதவும் என்று கூறினர்.