போடி: செங்கோட்டையன் கருத்து சரிதான். பிரிந்து சென்ற அனைவரையும் ஒன்று சேர்ந்தால்தான் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க முடியும். செங்கோட்டையனின் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
வஉசியின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு போடி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு போடி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அவரை வரவேற்றனர். பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கட்சி உருவானத்தில் இருந்தே அதிமுக தொடர்ச்சியாக 5 முறை தோல்வி கண்டது கிடையாது. அதிமுக பிரிந்து கிடப்பதால்தான் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. கழகத் தொண்டர்களும் பல சோதனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலை மாற வேண்டும் என்றால் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும்.
அதிமுக தொண்டர்களின் இயக்கம். இந்த இயக்கத்தில் தொண்டர்களை யாராலும் வெளியேற்ற முடியாது. கழகம் ஒருங்கிணைய வேண்டும். இதற்காக தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வோம்.
கழகத்தின் மூத்த முன்னோடி செங்கோட்டையன். அதிமுகவை தோற்றுவித்த எம்ஜிஆர் காலத்தில் இருந்தே மாவட்டச் செயலாளர், தலைமைக்கழக செயலாளர் உள்ளிட்ட பல உயர் பொறுப்புகளை அவர் வகித்து வருகிறார். அதிமுகவுக்கு அவர் ஆற்றிய பணி அளப்பரியது. தொண்டர்களை ஒருங்கிணைத்து, அரவணைத்துச் செல்பவர்.
செங்கோட்டையன் கருத்து சரிதான். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் ஒருங்கிணைத்தால்தான் மீண்டும் ஆட்சி அமைக்க முடியும். அவருடைய எண்ணம் நிறைவேற வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். நாங்களும் அதற்காகத்தான் முயற்சி செய்கிறோம் இவ்வாறு அவர் கூறினார்.