புதுடெல்லி: இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பாகவே தனது பெயரை போலியாக வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு எதிராக டெல்லி கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விகாஸ் திரிபாதி என்பவர் டெல்லி ரோஸ் அவென்யூ பகுதியில் உள்ள கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு இந்திய குடியுரிமை கடந்த 1983-ம் ஆண்டு ஏப்ரலில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், புதுடெல்லி சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் கடந்த 1980-ம் ஆண்டே இடம்பெற்றுள்ளது. கடந்த 1980-ம் ஆண்டு போலி ஆவணங்கள் மூலமாக அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருக்கலாம் என்பதால் இதுதொடர்பாக சோனியா காந்தி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கோரியிருந்தார். மனுவை விசாரித்த மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் வைபவ் சவுராஸியா, வழக்கு விசாரணையை வரும் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.