சென்னை: பூந்தமல்லி – பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக பூந்தமல்லி – சுங்குவார்சத்திரம் வரை நிலம் கையகப்படுத்தல் உள்ளிட்ட ஆரம்பக் கட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.2,125.84 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 116.1 கி.மீ தொலைவில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த 3 வழித்தடங்களில், இரு வழித்தடங்களை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அறிக்கை சமர்ப்பிப்பு: இவற்றில் ஒரு வழித்தடமான கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடம், பரந்தூர் வரை நீட்டிக்கப்பட உள்ளது. இதற்கான விரிவானதிட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதை 52.94 கி.மீ. தொலைவுக்கு ரூ.15,906 கோடி செலவில் செயல்படுத்தவும், 20 உயர்த்தப்பட்ட மெட்ரோ நிலையங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டது. இத்திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், மத்திய அரசின் ஒப்புதலுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் பூந்தமல்லி – பரந்தூர் மெட்ரோ ரயில் வழித்தடத்தின் ஒரு பகுதியாக, பூந்தமல்லி – சுங்குவார்சத்திரம் வரை மெட்ரோ ரயில் திட்டத்தில் நிலம் கையகப்படுத்தல் உள்ளிட்ட ஆரம்பக் கட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.2,125.84 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பூந்தமல்லி – சுங்குவார்சத்திரம் வரையிலான 29.9 கி.மீ. தொலைவுக்கான முன்மொழியப்பட்ட நீட்டிப்பு வழித்தடத்தில் ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
நிலம் கையகப்படுத்தல்: இந்த வழித்தடத்தில் நிலம் கையகப்படுத்தல், சாலைப் பணி, நிலப்பரப்பு ஆய்வுகள், புவி தொழில்நுட்ப ஆய்வு, தடுப்புகள் அமைத்தல், மரம் வெட்டுதல், குடிமைப் பணிகள் உட்பட பல்வேறு ஆரம்பக் கட்ட பணிகளை மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் தமிழக அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

