இம்பால்: மைதேயி, குகி குழுக்கள் மற்றும் மத்திய அரசு இடையே சுமுக உடன்பாடு எட்டப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலையை திறக்க குகி நிர்வாகக் குழு ஒப்புக் கொண்டுள்ளது. அந்த மாநிலத்தில் விரைவில் அமைதி திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் மணிப்பூரில் மைதேயி, குகி சமுதாயத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்து 258 பேர் உயிரிழந்தனர்.
1,108 பேர் காயமடைந்தனர். 400 தேவாலயங்கள், 132 இந்து கோயில்கள் சேதப்படுத்தப்பட்டன. சுமார் 60,000-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக மணிப்பூரில் வன்முறை நீடித்து வருகிறது. வரும் 13-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் மாநிலத்துக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த சூழலில் குகி சமுதாயத்தின் நிர்வாக குழுவான குகி சோ கவுன்சில், மைதேயி சமுதாயத்தின் நிர்வாக குழுவான ஐக்கிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் மூத்த நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மணிப்பூரில் குகி சமுதாயத்தின் தலைமை அமைப்பான குகி சோ கவுன்சில், மைதேயி சமுதாயத்தை சேர்ந்த நிர்வாக அமைப்பான ஐக்கிய மக்கள் முன்னணியின் மூத்த நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் கடந்த சில நாட்களாக டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டது.
இதன்படி தேசிய நெடுஞ்சாலை 2-ஐ திறக்க குகி சோ கவுன்சில் ஒப்புக் கொண்டிருக்கிறது. இதன்மூலம் மணிப்பூரில் தடையற்ற வர்த்தக போக்குவரத்து தொடங்கும். தேசிய நெடுஞ்சாலை 2-ல் பணியாற்றும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு குகி சோ கவுன்சில் முழு ஒத்துழைப்பு வழங்கும். குகி சோ கவுன்சில், ஐக்கிய மக்கள் முன்னணி, மத்திய அரசு இடையே முத்தரப்பு அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்படி மணிப்பூரில் அமைதியை நிலை நாட்ட அனைத்து தரப்பினரும் உறுதி அளித்துள்ளனர்.
கிளர்ச்சிக் குழுக்களிடம் இருக்கும் ஆயுதங்களை அருகில் உள்ள சிஆர்பிஎப், பிஎஸ்எப் முகாம்களில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மணிப்பூரில் சில வெளிநாட்டினர் ஊடுருவி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கிளர்ச்சிக் குழுக்களின் முகாம்கள் மூடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மணிப்பூர் போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: மணிப்பூரின் பள்ளத்தாக்கு பகுதிகளில் மைதேயி சமுதாய மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். மலைப் பகுதிகளில் குகிசமுதாய மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். கடந்த 2023-ம் ஆண்டு மோதலுக்கு பிறகு இரு சமுதாய மக்களும் எதிரெதிர் அணிகளாக செயல்பட்டனர்.
எனவே மத்திய அரசு சார்பில் இரு தரப்பினருடனும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக மைதேயி, குகி, மத்திய அரசு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்பும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
நாகா அமைப்பு: வர்த்தக தடை
இந்தியா – மியான்மர் சர்வதேச எல்லையில், நாட்டின் பாதுகாப்பு கருதி மத்திய அரசு வேலி அமைத்து வருகிறது. மேலும் இருநாட்டு எல்லையில் விசா இல்லாமல் 16 கி.மீ. தூரம் பயணிக்கும் சுதந்திர நடமாட்ட ஒப்பந்தத்தை (எப்எம்ஆர்) ரத்து செய்வது குறித்தும் பரிசீலித்து வருகிறது. இவ்விரு நடவடிக்கைகளுக்கும் மணிப்பூர் நாகா பழங்குடியின அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதனால் தங்கள் இன மற்றும் குடும்ப உறவுகள் பாதிக்கப்படும் என்று அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் எல்லை வேலி மற்றும் எப்எம்ஆர் ரத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மணிப்பூரில் தங்கள் சமூகத்தினர் வசிக்கும் அனைத்து பகுதிகளிலும் செப்டம்பர் 8 முதல் வர்த்தக தடை அமல்படுத்தப்படும், தேசிய நெடுஞ்சாலைகளில் சரக்கு வாகனங்கள் செல்வதற்கான தடையும் இதில் அடங்கும் என்று ஐக்கிய நாகா கவுன்சில் அறிவித்துள்ளது.