புதுடெல்லி: ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கைக்கு பின்பான வரி குறைப்பு செப்டம்பர் 22-ம் தேதி முதல் அமலாகும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்தார். இது தொடர்பாக பிரதமர் தலைமையில் மூத்த மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன்பிறகு, பல்வேறு மாநிலங்களின் நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், புதுடெல்லியில் புதன்கிழமை அன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 2 அடுக்குகளாக ஜிஎஸ்டி வரி வரம்பை குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
அந்த வகையில் 12% மற்றும் 28% ஜிஎஸ்டி வரி விகிதங்கள் நீக்கப்பட்டு உள்ளதாகவும், இனி 5% மற்றும் 18% என மட்டுமே ஜிஎஸ்டி வரி அடுக்குகள் இருக்கும் என அவர் தெரிவித்தார். அதேநேரத்தில் சிறப்பு ஜிஎஸ்டி வரியாக ஆடம்பர பொருட்களுக்கு 40% வரி விதிக்கப்படும் என அவர் கூறினார்.
ஜிஎஸ்டி சீர்திருத்தம் சார்ந்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்
- தனிநபர் ஆயுள் காப்பீடு, ஹெல்த் இன்சூரன்ஸ், உயிர் காக்கும் மருந்துகளுக்கு இனி ஜிஎஸ்டி வரி இல்லை. இதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- ஆட்டோமொபைல் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 18% குறைக்கப்படுகிறது. இதற்கு முன்னர் இது 28% இருந்தது.
- 350 சிசி திறன் மற்றும் அதற்கு மேல் உள்ள இருசக்கர வாகனங்கள், சொகுசு கார்களுக்கு 40% ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும்.
- சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள், பான் மசாலா, குட்கா, இனிப்பு கலந்த பொங்கலுக்கு 40% சிறப்பு ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும்.
- தினசரி மக்கள் பயன்படுத்தும் ஹேர் ஆயில், ஷாம்பு, டூத் பேஸ்ட், சோப்பு, ஷேவிங் கிரீம் உள்ளிட்டவற்றுக்கு 5% ஜிஎஸ்டி வரி மட்டுமே வசூலிக்கப்படும்.
- ஏசி, டிவி, கார் உள்ளிட்டவற்றுக்கு 18% ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.
- விவசாய உபகரணங்களுக்கு 5% ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.
- கல்வி சார்ந்து எழுதுபொருளான பென்சில், ஷார்ப்னர், கிரேயான்ஸ், நோட்டுப்புத்தகம், எரேசர், வரைபடங்கள், சார்ட் உள்ளிட்டவற்றுக்கு ஜிஎஸ்டி வரியில் விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- அமெரிக்காவின் 50% வரி விதிப்புக்கும் ஜிஎஸ்டி சீர்திருத்த முடிவுக்கும் தொடர்பு இல்லை. இது குறித்து கடந்த 18 மாதங்களாக நாங்கள் ஆலோசித்து வந்தோம் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
- ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலனை மக்களுக்கு விரைந்து வழங்குவதில் பிரதமர் மோடி விரும்பினார் என நிர்மலா சீதாராமன் கூறினார்.
- இந்த ஜிஎஸ்டி வரி விகிதம் வரும் செப்.22-ம் தேதி முதல் அமலுக்கு வரும். இதில் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் சேராது என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
- ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவு வணிகங்களுக்கான சிக்கல்களை குறைத்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.