மதுரை: தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு கேட்டு தாக்கலான மனுவுக்கு டிஜிபி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த 108 அவசர ஊர்தி ஓட்டுநர் இருளாண்டி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நான் கடந்த 16 ஆண்டுகளாக 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வருகிறேன். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடந்த 18.08.2025 வேலூர் மாவட்டத்தில் அணைப் பகுதியில் ‘மக்களை காப்போம்’ பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். இரவு 9.45 மணியளவில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சுரேந்தர், அடுக்கம்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட சந்திரா என்ற பெண்ணை அழைத்துக்கொண்டு கூட்டம் நடைபெற்ற இடத்தை கடந்தார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி, ஆம்புலன்ஸை பார்த்து, இனிமேல் நோயாளி இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதே வாகனத்தில் நோயாளியாகச் செல்வார் என பகிரங்மாக மிரட்டினார். இந்த மிரட்டல் தொடர்பாக போலீஸில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் 24.08.2025 அன்று திருச்சி அதிமுக பிரச்சாரக் கூட்டத்தின் போது கூட்டத்தில் மயங்கி விழுந்த ஒருவரை அழைத்துச் செல்ல 108 ஆம்புலன்ஸ் வந்த போது, அங்கிருந்த அதிமுக உறுப்பினர்கள் டிரைவரைத் தாக்கி 108 ஆம்புலன்ஸை சேதப்படுத்தினர். இதில் பாதிக்கப்பட்ட ஓட்டுநர் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் 108 ஊழியர்களின் உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே 108 ஆம்புலன்ஸ் மற்றும் அதன் ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும். குறைந்த பட்சம் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடியும் வரையாவது தமிழ்நாடு முழுவதும் உள்ள 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்களின் உயிருக்கும் உடைமைக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், திருச்சியில் ஆம்புலன்ஸ் வேன் ஓட்டுனர் தாக்கப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதிகள், ஆம்புலன்ஸ் வாகனங்களை தாக்கியது யாராக இருந்தாலும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மனு தொடர்பாக டிஜிபி பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை செப்.12-க்கு தள்ளிவைத்தனர்.