பொன்னேரி: மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் வட மாநில தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் சமரசம் பேசவந்த போலீஸார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. பதிலுக்கு போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் கூட்டத்தைக் கலைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நடந்தது என்ன? – திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள காட்டுப்பள்ளியில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அமர்பிரசாத் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், அமர்பிரசாத் நேற்றிரவு காட்டுப்பள்ளியில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் தங்கும் குடியிருப்பு பகுதியில், வீட்டின் மாடியில் ஏறும்போது தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, தகவலறிந்த காட்டூர் போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து, அமர்பிரசாத்தின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், உயிரிழந்த அமர்பிரசாத்தின் உடலை தங்களிடம் காண்பிக்க வேண்டும், அவரின் உயிரிழப்பு தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும், அமர்பிரசாத்தின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், காட்டுப்பள்ளி பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனிடையே, பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகாக அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களிடம் போலீஸார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர்.
ஆனால், போராட்டக்காரர்கள் சிலர் போலீஸார் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீஸார் கூட்டத்தை தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் கலைத்தனர். இதனால் அப்பகுதியே சிறிது நேரம் கலவர் பூமி போல் இருந்தது. இந்நிலையில், அங்கு தொடர்ந்து போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.