மதுரை: திருச்சி துறையூரில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரக் கூட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வேன் மற்றும் ஓட்டுநர் தாக்கப்பட்ட வழக்கில் அதிமுகவினர் 4 பேருக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூரில் ஆகஸ்ட் 24-ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும், ஆம்புலன்ஸ் ஒட்டுநர் தாக்கப்பட்டார். இந்தs சம்பவம் தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த 10 பேர் மீது துறையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதில் துறையூரைச் சேர்ந்த பாலமுருகவேல் என்ற அமைதி பாலு, விக்கி என்ற விவேக் , தீன தயாளன், கலிங்க முடையான்பட்டியைச் சேர்ந்த பொன் காமராஜ் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். அதில், ‘அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, திருச்சி துறையூர் பேருந்து நிலையம் அருகே ஆகஸ்ட் 24-ம் தேதி அன்று மாலை சுமார் 6.30 மணியளவில் அரசியல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அப்பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் வந்தது.
பின்னர் 108 ஆம்புலன்ஸ் வேனையும், அதன் ஓட்டுநரையும் தாக்கியதாக துறையூர் காவல் நிலைய போலீஸார் எங்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். எங்களுக்கும் ஆம்புலன்ஸ் தாக்கப்பட்ட சம்பவத்துக்கும் தொடர்பில்லை. எனவே முன்ஜாமின் வழங்க வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், எடப்பாடி பழனிசாமியின் பொதுக் கூட்டங்களுக்கு வேண்டும் என்றே ஆம்புலன்ஸ்களை அனுப்பி வைத்து இடையூறு செய்கின்றனர் என வாதிடப்பட்டது. இதற்கு அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதி, மனுதாரர்கள் 4 பேருக்கும் இடைக்கால முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. மனு தொடர்பாக துறையூர் காவல் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்.8-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.