சென்னை: விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பான உத்தரவுகளை பின்பற்றுவதில் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் மாநகராட்சி அதிகாரிகளை எச்சரித்துள்ளது.
சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட விருகம்பாக்கம் பகுதியில் கட்டப்பட்ட விதிமீறல் கட்டடத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அப்பகுதியை சேர்ந்த பி.தாமஸ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பல்வேறு உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்தும், வெவ்வேறு காரணங்களை கூறி, அவற்றை நிறைவேற்ற தவறியதாக சென்னை மாநகராட்சி ஆணையர், கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக, தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் ஆஜராக உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜரான அதிகாரிகள், சூசன் ஜான் என்பவருக்கு சொந்தமான கட்டடத்தை ஆகஸ்ட் 15ஆம் தேதி பூட்டி சீல் வைத்துவிட்டதாக கூறியதுடன், தாமதமாக நடவடிக்கை எடுத்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பையும் கோரினர்.
பின்னர், இந்த வழக்கில் உத்தரவிட்ட தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவத்ஸவா, நீதிபதி சுந்தர் மோகன் அமர்வு ஆக்கிரமிப்பாளருக்கு அனைத்து வாய்ப்புகளையும் வழங்கும் வகையில், மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியமாகவும், செயலற்றும் இருந்துள்ளதாக அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தங்கள் தவறுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த நீதிபதிகள், தாமதம் ஆனாலும், விதிமீறல் கட்டடத்தை பூட்டி சில் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளதால், இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவையும் பிறப்பிக்க தேவையில்லை எனக் கூறி வழக்கை முடித்துவைத்தனர்.
அதேசமயம், விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பாக நீதிமன்றத்தின் உத்தரவுகளைப் பின்பற்றுவதில் எதிர்காலத்தில் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டுமென சென்னை மாநகராட்சி அதிகாரிகளை எச்சரித்தும் உத்தரவிட்டுள்ளனர்.