சிட்னி: ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் அதிக அளவில் குடியேறி வருகின்றனர். அந்நாட்டில் வசிக்கும் 2-ல் ஒருவர் வெளிநாட்டில் பிறந்தவராக அல்லது அவரது பெற்றோர் வெளிநாட்டில் பிறந்தவராக உள்ளார். இதற்கு நவ-நாஜிக்கள் மற்றும் வலதுசாரி அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வெளிநாட்டினரின் குடியேற்றத்தைத் தடுக்க வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்று மாபெரும் போராட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. ‘ஆஸ்திரேலியாவுக்கான பேரணி’ என்ற பெயரில் நடைபெற்ற இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். சிட்னி நகரில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 8 ஆயிரம் பேர் தேசியக் கொடியேந்தியபடி பங்கேற்றனர்.
இதனிடையே, இந்தப் போராட்டத்துக்கு இடதுசாரிகள் தலைமையிலான அந்நாட்டு அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது நவ-நாஜிக்களின் வெறுப்பை பரப்பும் செயல் என்று அரசு குற்றம்சாட்டி உள்ளது. இந்த போராட்டத்துக்கு எதிராக அகதிகள் நடவடிக்கை கூட்டமைப்பு பேரணி நடத்தியது.
இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், “ஆஸ்திரேலியாவுக்கான பேரணி, தீவிர வலதுசாரி அமைப்பினரின் வெறுப்பு மற்றும் கோபத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது’’ என கூறப்பட்டுள்ளது.