உன்னாவ்: உத்தர பிரதேசம் உன்னாவ் மாவட்டம் அக்ரம்பூர் சுல்தான் கேரா கிராமத்தைச் சேர்ந்தவர் சூரஜ் பால் (45). இவர் கடந்த 2020-ம் ஆண்டு காணாமல் போனார். இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் கொடுத்தனர்.
இந்நிலையில் சூரஜ் பால் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜம்மு காஷ்மீர் எல்லையை கடந்து பாகிஸ்தான் சென்றதாகவும், இதனால் அவர் அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் எனவும் சூரஜ் பாலின் உறவினர் ரமேஷுக்கு, இந்திய பாதுகாப்பு படையினர் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்தாண்டு மே மாதம் சூரஜ் பால் விடுதலை செய்யப்பட்டு வாகா எல்லையில் உள்ள இந்திய வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் இந்தியா வந்தும் கடந்த ஓராண்டாக சொந்த ஊர் திரும்பாமல் பல இடங்களில் சுற்றித் திரிந்துள்ளார்.
இந்நிலையில் உத்தர பிரதேசம் உன்னாவ் மாவட்டத்தின் லோக் நகர் ரயில்வே கிராஸிங் அருகே, சூரஜ் பாலை பார்த்த கிராமத்தினர், அவரது உறவினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து சூரஜ் பாலை பார்த்தபோது, அவர் மன நிலை பாதிப்புடன் இருந்தது தெரியவந்தது. கேட்கும் கேள்விகளுக்கு அவரால் சரியான பதில் அளிக்க முடியவில்லை.