சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 4-வது வழித்தடத்தில் ஒரு பகுதியான, பூந்தமல்லி பைபாஸ் – போரூர் சந்திப்பு வரையிலான வழித்தடத்தில் பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கான சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்து உள்ளது.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் செயல்படுத்தப்படும் 3 வழித்தடங்களில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான வழித்தடம் (26.1 கி.மீ.) ஒன்றாகும். இத்தடத்தில் பூந்தமல்லி – போரூர் சந்திப்பு மெட்ரோ நிலையம் வரையிலான (10 கி.மீ.) இருவழிப் பாதையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்று வந்தது. சிக்னல், இழுவைத் திறன் உட்பட பல்வேறு தொழில்நுட்ப சோதனைகள் நடத்தப்பட்டன.
இதற்கிடையில், இத்தடத்தில் பாதுகாப்புச் சான்றிதழ் பெறுவதற்கான சோதனை கடந்த 16-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இச்சோதனையை ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு மேற்கொண்டது. இந்த பாதுகாப்பு சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இச்சோதனைகளில் மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு, பயணிகளின் பயண வசதி மதிப்பீடு செய்யப்பட்டது. அத்துடன் வழித்தடத்தில் ரயில்களின் இழுவை மற்றும் பிரேக்கிங் செயல்திறன் சரிபார்க்கப்பட்டது. மெட்ரோ ரயில் பெட்டிகள் மற்றும் தண்டவாளத்தின் தரம் மதிப்பீடு செய்யப்பட்டது.
மின்சாரம், காற்றழுத்தம் மற்றும் அவசர காலங்களில் பயன்படுத்தப்படும் பிரேக் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. மெட்ரோ ரயில் பெட்டிகளைத் தயாரிக்கும்போது, அதன் வடிவமைப்பு அம்சங்கள் பின்பற்றப்பட்டுள்ளன என்பதை இந்த சோதனைகள் நிரூபிக்கின்றன. மேலும் திட்டமிடப்பட்ட தேதிக்கு முன்னதாகவே சோதனைகள் நிறைவடைந்துள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.