திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் அறங்காவலர் குழு தலைவராக பி.ஆர். நாயுடு நியமனம் செய்யப்பட்டதில் இருந்து, வேற்று மத ஊழியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்துக்கள் என கூறி, போலி சான்றிதழ் கொடுத்து வேற்று மதத்தை தழுவி, அந்த மதத்தை பின்பற்றி வரும் தேவஸ்தான ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வருகின்றனர்.
முதலில் 22 வேற்று மத ஊழியர்கள் இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து மேலும் 6 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 4 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இணை பொறியாளர் எலிசார், தலைமை செவிலியர் ரோஸி, பார்மஸிஸ்ட் பிரேமாவதி, டாக்டர் அசுந்தா ஆகிய 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஒரு மாபெரும் இந்து அறக்கட்டளையின் கீழ் இயங்கும் திருப்பதி தேவஸ்தானத்தில் நிபந்தனைகளை மீறி நடந்து கொண்டதாலும் மேற்கண்ட 4 ஊழியர்களும் உடனடியாக பணியிலிருந்து இடைக்கால நீக்கம் செய்யப்படுவதாக தேவஸ்தானம் ஓர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.