சென்னை: நடிகை ஸ்ரீதேவி வாங்கிய சொத்துக்கு மோசடியான வாரிசு சான்றிதழ் மூலமாக 3 பேர் உரிமை கோருவதாக திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக தாம்பரம் வட்டாட்சியர் விசாரித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் போனி கபூர் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது மனைவியும், நடிகையுமான மறைந்த ஸ்ரீதேவி, கடந்த 1988-ம் ஆண்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு சொத்தை, சம்பந்த முதலியார் குடும்பத்தினரிடம் இருந்து விலைக்கு வாங்கியிருந்தார்.
கடந்த 37 ஆண்டுகளாக அந்த சொத்தை நாங்கள் அனுபவித்து வரும் நிலையில், சம்பந்த முதலியாரின் மகன் சந்திரசேகரனின் வாரிசுகள் என கூறிக்கொண்டு 3 பேர் மோசடியாக வாரிசு சான்றிதழ் பெற்று, எங்களது சொத்துக்கு உரிமை கோரி வருகின்றனர். இந்த வாரிசு சான்றிதழ் தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 2005-ம் ஆண்டு மோசடியாக பெறப்பட்டுள்ளது. இந்த வாரிசு சான்றிதழை ரத்து செய்யக்கோரி நாங்கள் அளித்த மனுவை அதிகாரிகள் பரிசீலிக்கவில்லை.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது போனி கபூர் அளித்துள்ள மனு மீது விசாரணை நடத்தப்பட்டு, விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி, தங்களது சொத்துக்கு சிலர் மோசடியான வாரிசு சான்றிதழ் மூலமாக உரிமை கோருவதாக போனி கபூர் அளித்துள்ள மனுவை விசாரித்து 4 வார காலத்தில் தாம்பரம் வட்டாட்சியர் தகுந்த உத்தரவை பிறப்பிக்க ஆணையிட்டுள்ளார்.