சென்னை: 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டிருந்த 505 வாக்குறுதிகளில் நிறைவேற்றப்படாத 373 வாக்குறுதிகள் குறித்த விரிவான பட்டியலை பாமக வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பாமக வெளியிட்ட அறிக்கையில், ‘ 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, மக்களுக்கு ஆசைகாட்டி அவர்களின் வாக்குகளை கைப்பற்றும் நோக்குடன் திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டது. ஆனால், அந்த தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை ஆட்சிக்கு வந்த பின் திமுக அரசு நிறைவேற்றவில்லை. இதனை பட்டியலிடும் விதமாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தயாரித்து வெளியிடப்படும் “விடியல் எங்கே?” என்ற தலைப்பிலான ஆவணம் இது ஆகும்.
திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதிகளின் விவரம் வருமாறு:
1. திமுக அளித்த வாக்குறுதிகளின் எண்ணிக்கை – 505
2. முழுமையாக நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் – 66
3. அரைகுறையாக நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் – 66
4. நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் – 373
அதாவது, 2021 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக அளித்த வாக்குறுதிகளில் 12.94% மட்டும்தான் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள 87.06% வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில சுயாட்சி, தமிழ் வளர்ச்சி: மாநில சுயாட்சி, கல்வி வளர்ச்சி ஆகியவை சார்ந்து மொத்தம் 12 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. அவற்றில் 8 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. 3 வாக்குறுதிகள் அரைகுறையாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. ஒரே ஒரு வாக்குறுதி மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈழத் தமிழர் நலன் தொடர்பாக திமுக சார்பில் 4 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்றுகூட நிறைவேற்றப்படவில்லை.
நிர்வாக சீர்திருத்தம்; சேவை உரிமைச் சட்டம் இல்லை: நிர்வாக சீர்திருத்தம் தொடர்பாக மொத்தம் 9 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. அவற்றில் 8 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஒரே ஒரு வாக்குறுதி மட்டுமே அரைகுறையாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
நிறைவேற்றப்படாத முக்கிய வாக்குறுதிகள்:
* லோக் அயுக்தா அமைப்பு வலுப்படுத்தப்பட்டு அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீதான குற்றங்கள் விரைந்து விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும். (வாக்குறுதி எண். 18)
* சேவை உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்படும். (வாக்குறுதி எண்.19)
உழவர்கள் நலன்: உழவர்கள் நலன் மற்றும் வேளாண்மை தொடர்பாக மொத்தம் 56 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. அவற்றில் 41 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. 7 வாக்குறுதிகள் அரைகுறையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. 8 வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன.
நிறைவேற்றப்படாத முக்கிய வாக்குறுதிகள்
* விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் விளை நிலங்கள் வேறு பயன்பாட்டுக்கு மாற்றப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். (வாக்குறுதி எண் – 43)
* ஒவ்வொரு ஒன்றியத்திலும் தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும். இவை உலர் களங்களுடன் கூடிய கொள்முதல் நிலையங்களுடன் இணைக்கப்படும். (வாக்குறுதி எண்-50)
* நியாயவிலைக் கடைகளில் நாட்டுச் சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். (வாக்குறுதி எண் – 68)
நீர்ப்பாசனத் திட்டங்கள் இல்லை: நீர் மேலாண்மைத் துறை தொடர்பாக 29 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. அவற்றில் 23 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. 4 வாக்குறுதிகள் அரைகுறையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. 2 வாக்குறுதிகள் மட்டுமே முழுமையாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
நிறைவேற்றப்படாத முக்கிய வாக்குறுதிகள்:
* நீர்நிலைகளை மேம்படுத்துவதற்கான நீர் மேலாண்மைத் திட்டம் முதல் கட்டமாக ரூ.10 ஆயிரம் கோடி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும். (வாக்குறுதி எண் – 89)
* சென்னை மாநகரின் கூவம், அடையாறு, கொசஸ்தலை ஆறு மற்றும் ஏரிகளின் பாதுகாப்பிற்காக ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். (வாக்குறுதி எண் – 93)
* நொய்யல் ஆறு சீர்படுத்தப்பட்டு, பவானி – நொய்யலாறு – அமராவதியாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். (வாக்குறுதி எண் – 103)
மீனவர்கள் நலன்: மீனவர்களின் நலன்கள், மீனவர்களின் பாதுகாப்பு தொடர்பாக 25 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு இருந்தன. அவற்றில் ஒரே ஒரு வாக்குறுதிகூட முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. 5 வாக்குறுதிகள் அரைகுறையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. 20 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
நிறைவேற்றப்படாத முக்கிய வாக்குறுதிகள்:
* மீனவர்கள் நலனைக் காக்க கச்சத்தீவை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். (வாக்குறுதி எண் – 113)
* மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து அதற்கான சலுகைகளைப் பெற்றுத்தர திமுக அரசு நடவடிக்கை எடுக்கும். (வாக்குறுதி எண் – 114)
* மீனவர்களுக்கு 2 இலட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்; (வாக்குறுதி எண் – 116)
நெசவாளர்கள் நலன்: நெசவாளர்கள் தொடர்பாக அளிக்கப்பட்ட மொத்த வாக்குறுதிகள் 14, நிறைவேற்றப்பட்டவை 3, நிறைவேற்றப்படாதவை 9, அரைகுறையாக நிறைவேற்றப்பட்டவை 2.
நிறைவேற்றப்படாத முக்கிய வாக்குறுதிகள்:
* நெசவாளர்களுக்கென்று தனியாகக் கூட்டுறவு வங்கி அமைக்கப்படும். (வாக்குறுதி எண்-138)
* ஜவுளித்துறையை மேம்படுத்துவதற்குத் தனியாக ஜவுளி ஆணையம் அமைக்கப்படும். (வாக்குறுதி எண் – 142)
தொழிலாளர்கள் நலன்: பாட்டாளி வர்க்கமான தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், மொத்தம் 8 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அவற்றில் 6 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, தலா ஒரு வாக்குறுதி அரைகுறையாகவும், முழுமையாகவும் நிறைவேற்றப்பட்டன.
நிறைவேற்றப்படாத முக்கிய வாக்குறுதிகள்:
* போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும். (வாக்குறுதி எண் – 152)
மாணவர்கள் நலன் மற்றும் வேலைவாய்ப்பு: மாணவர்களின் நலன் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பாக 33 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. அவற்றில் நீட் ரத்து உள்ளிட்ட 21 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. தலா 6 வாக்குறுதிகள் அரைகுறையாகவும், முழுமையாகவும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நிறைவேற்றப்படாத முக்கிய வாக்குறுதிகள்:
* மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும். (வாக்குறுதி எண் – 159)
* நீட் தேர்வு ரத்து செய்யப்படும். (வாக்குறுதி எண் – 160)
* மருத்துவ மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீடு ரத்து செய்யப்படும். (வாக்குறுதி எண் – 161)
* முதல் தலைமுறை பட்டதாரிக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை. (வாக்குறுதி எண்-179)
* பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்படும். (வாக்குறுதி எண் – 181)
* அரசுத் துறை காலியிடங்கள் நிரப்பப்பட்டு, 3.5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை. (வாக்குறுதி எண் – 187)
* அரசுத் துறைகளில் 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும். (வாக்குறுதி எண் – 188, 189, 190, 191)
தொழில் வளர்ச்சி: தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக 28 வாக்குறுதிகளை திமுக அதன் தேர்தல் அறிக்கையில் அளித்திருந்தது. ஆனால், அவற்றில் 23 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. 3 வாக்குறுதிகள் அரைகுறையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. இரு வாக்குறுதிகள் மட்டுமே முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
நிறைவேற்றப்படாத முக்கிய வாக்குறுதிகள்:
* தமிழகத்தில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களில் 75% வேலைவாய்ப்புகளைத் தமிழர்களுக்கே வழங்கப்பட சட்டம் இயற்றப்படும். (வாக்குறுதி எண் – 196)
* வேலையில்லா பட்டதாரிகள் புதிய தொழில் தொடங்க ஆண்டுக்கு 25 ஆயிரம் பேருக்கு தலா ரூ.20 இலட்சம் குறைந்த வட்டி கடன் வழங்கப்படும். (வாக்குறுதி எண் – 206)
மின்கட்டணம் குறைக்கப்படவில்லை: மின்துறை சார்ந்து மொத்தம் 14 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அவற்றில் ஒரே ஒரு வாக்குறுதி மட்டும்தான் நிறைவேற்றப்பட்டது. 2 வாக்குறுதிகள் அரைகுறையாக நிறைவேற்றப்பட்டன. 11 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
நிறைவேற்றப்படாத முக்கிய வாக்குறுதிகள்:
* மாதம் ஒருமுறை மின் கட்டணத்தை கணக்கிடும் முறை கொண்டுவரப்படும். இதனால், நுகர்வோருக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வரை மிச்சமாகும். (வாக்குறுதி எண் – 221)
பொதுவிநியோகத் திட்டம்: பொதுவிநியோகத் திட்டம் தொடர்பாக மொத்தம் 7 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அவற்றில் ஒன்றுகூட நிறைவேற்றப்படவில்லை.
நிறைவேற்றப்படாத முக்கிய வாக்குறுதிகள்
* மின் சேமிப்பை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் மானிய விலையில் 3 எல்.இ.டி. பல்புகள் வழங்கப்படும். (வாக்குறுதி எண் – 239)
* நியாய விலைக் கடைகளில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் மாதந்தோறும் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும். அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட உளுந்து மீண்டும் வழங்கப்படும். (வாக்குறுதி எண் – 240)
பெண்கள் பாதுகாப்பு: பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம் தொடர்பாக 22 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அவற்றில் 14 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. தலா 4 வாக்குறுதிகள் அரைகுறையாகவும், முழுமையாகவும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நிறைவேற்றப்படாத முக்கிய வாக்குறுதிகள்:
* 35 வயதுக்கு மேற்பட்ட கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் அரசு மற்றும் அரசு நிறுவனங்களில் வேலை வழங்கப்படும். (வாக்குறுதி எண் – 250)
* 5 வகையான திருமண நிதி உதவித் திட்டத்தில் வழங்கப்படும் உதவித் தொகை ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்படுவதுடன், 8 கிராம் தங்கமும் வழங்கப்படும். (வாக்குறுதி எண் – 255, 256, 257, 258, 259)
அரசு ஊழியர்கள் நலன்: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் தொடர்பாக மொத்தம் 10 வாக்குறுதிகளை திமுக அளித்தது. ஆனால், அவற்றில் ஒரே ஒரு வாக்குறுதி மட்டுமே நிறைவேற்றப்பட்டது. மீதமுள்ள 9 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
நிறைவேற்றப்படாத முக்கிய வாக்குறுதிகள்: * புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும். (வாக்குறுதி எண் – 309)
* ரூ.8 ஆயிரம் அடிப்படை ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும். (வாக்குறுதி எண் – 311)
* தமிழகத்தில் பணியாற்றும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசுப் பணியாளர்களாகப் பணியமர்த்தி காலமுறை ஊதியம் வழங்கப்படும். (வாக்குறுதி எண்-31)
சட்டப்பேரவை, அரசு நிர்வாகம், காவல்துறை: சட்டப்பேரவை, அரசு நிர்வாகம், காவல்துறை உள்ளிட்ட துறைகள் சார்ந்து 20 வாக்குறுதிகளை திமுக அளித்திருந்தது. அவற்றில் ஒரே ஒரு வாக்குறுதி மட்டும்தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. 13 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, 6 வாக்குறுதிகள் அரைகுறையாக நிறைவேற்றப்பட்டு உள்ளன.
நிறைவேற்றப்படாத முக்கிய வாக்குறுதிகள்: * தமிழ்நாட்டில் சட்ட மேலவையை மீண்டும் கொண்டு வருவதற்கு வசதியாக அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம். (வாக்குறுதி எண் – 374)
* தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்புச் செய்யப்படும். (வாக்குறுதி எண் – 375)
* ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறுவது உறுதி செய்யப்படும். (வாக்குறுதி எண் – 376)
இந்து சமய அறநிலையத்துறை: இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் அளிக்கப்பட்ட 17 வாக்குறுதிகளில் 11 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. 4 வாக்குறுதிகள் அரைகுறையாகவும், 2 வாக்குறுதிகள் முழுமையாகவும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நிறைவேற்றப்படாத முக்கிய வாக்குறுதிகள்:
* கிராமக் கோவில் பூசாரிகளுக்கு மாதம் ரூ.2000 ஊதியம் வழங்கப்படும். ஓய்வூதியம் ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்படும். (வாக்குறுதி எண் – 406)
* கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் விரிவுபடுத்தப்படும். (வாக்குறுதி எண் – 413)
* அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தில் பயிற்சி பெற்ற 205 பேருக்கு அர்ச்சகர் பணி வழங்கப்படும். (வாக்குறுதி எண் – 417)
போக்குவரத்து: நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து, தொடர் வண்டித் திட்டங்கள், விமான நிலையங்கள் போன்றவை சார்ந்து 27 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. அவற்றில் 24 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, இரு வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டன. ஒரு வாக்குறுதி அரைகுறையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
நிறைவேற்றப்படாத முக்கிய வாக்குறுதிகள்:
* சென்னை மெட்ரோ ரயிலில் கல்லூரி மாணவர்களுக்கு கட்டணச் சலுகை வழங்கப்படும். (வாக்குறுதி எண் – 446)
* வேலூர், கரூர், ஓசூர், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் புதிய விமான நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். (வாக்குறுதி எண் – 448)
பிற துறைகள்: பிற துறைகள் சார்ந்து மொத்தம் 57 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அவற்றில் 37 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
நிறைவேற்றப்படாத முக்கிய வாக்குறுதிகள்: * முக்கியமான கட்டுமானப் பொருள்களான சிமெண்ட், கம்பி, செங்கல், மணல், மரம் போன்ற பொருள்களை அத்தியாவசியப் பொருள்களின் பட்டியலில் கொண்டு வந்து விலை குறைக்கப்படும். (வாக்குறுதி எண் – 468)
* சமையல் எரிவாயு உருளைகளுக்கு, ஒரு மாதத்திற்கு ஓர் உருளை என்ற அளவில், ரூ.100 வீதம் மானியம் வழங்கப்படும். (வாக்குறுதி எண் – 503)’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.