சென்னை: சென்னை இதழியல் நிறுவனத்தை கோட்டூர்புரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: செய்தித் துறை மானியக் கோரிக்கையில், இதழியல் துறையில் பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் ஊடகக் கல்வி மேம்பாட்டுக்கு ஒருமுதன்மையான கல்வி நிறுவனத்தை நிறுவி, அதன்மூலம் ஆர்வம் மிகுந்த இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கவும், இதழியல் மற்றும் ஊடக ஆய்வியலில் தரமான கல்வியை வழங்கும் வகையிலும், இதழியல் மற்றும் ஊடகவியல் கல்வி நிறுவனம் இக்கல்வியாண்டு முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இதழியல் துறையில் ஆர்வமுள்ள இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் நோக்குடனும், தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, ஊடகக் கல்வியை வழங்கு வதற்காகவும், தமிழகத்தைச் சேர்ந்த இளைய தலைமுறையினருக்கு குறைந்த கட்டணத்தில், ஓர் ஆண்டு இதழியல் முதுநிலை பட்டயப் படிப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக, சென்னை, கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில் தமிழக அரசு சார்பில் சென்னை இதழியல் கல்வி நிறுவனம் அமைக்கப்பட்டு, அதற்காக ரூ.7.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தில் இதழியல் முதுநிலை பட்டயப் படிப்பு இந்த கல்வியாண்டு முதல் (2025-26) தொடங்கப்படுகிறது. இங்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழியில் பயிற்றுவிக்கப்படும். இந்நிறுவனத்தில் அச்சு, தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணைய ஊடகங்களில் பணிபுரிவதற்கான திறமையை வளர்த்துக்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச கல்வி நிறுவனங்களுடன் இந்நிறுவனம் ஒப்பந்தம் செய்துகொள்ள உள்ளது.
இந்நிலையில், இந்த கல்வி நிறுவனத்தை கோட்டூர்புரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து, பார்வையிட்டார். தொடர்ந்து, இக்கல்வி நிறுவனத்தில் இதழியல் முதுநிலை பட்டயப் படிப்பில் முதலாமாண்டு சேர்க்கை பெற்ற மாணவ, மாணவியர்களிடம் முதல்வர் கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சியில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், செய்தித்துறை செயலர் வே.ராஜாராமன், சென்னை இதழியல் நிறுவனத்தின் சிறப்பு பணி அலுவலர் எஸ்.ஏ.ராமன், செய்தித்துறை இயக்குநர் இரா.வைத்திநாதன், சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தின் நிர்வாகக் குழுத் தலைவர் என்.ரவி, தலைமை இயக்குநர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.