நியூயார்க்: ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான யுஎஸ் ஓபன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 7-ம் நிலை வீரரும் 4 முறை சாம்பியனுமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-1, 7-6 (7-3), 6-2 என்ற செட் கணக்கில் 19 வயதான அமெரிக்காவின் லர்னர் டியனை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
4-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ் 7-5, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த எமிலியோ நவாவையும், 6-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பென் ஷெல்டன் 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் பெருவின் இக்னாசி யோவையும் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
13-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ், 51-ம் நிலை வீரரான பெஞ்ஜமின் போன்ஸியுடன் மோதினார். இதில் டேனியல் மேத்வதேவ், 3-6, 5-7, 7-6 (7-5), 6-0, 4-6 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார். இந்த ஆட்டம் 3 மணி நேரம் 45 நிமிடங்கள்
நடைபெற்றது.
மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நடப்பு சாம்பியனும் முதல் நிலை வீராங்கனையுமான பெலாரஸின் அரினா சபலென்கா 7-5, 6-1 என்ற நேர் செட் கணக்கில் 109-ம் நிலை வீராங்கனையான சுவிட்சர்லாந்தின் ரெபேக்கா மசரோவாவை தோற்கடித்தார்.
4-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-0, 6-4 என்ற செட் கணக்கில் 104-ம் நிலை வீராங்கனையான எகிப்தின் மாயர் ஷெஃரிப்பையும், 7-ம் நிலை வீராங்கனையான இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி 6-2, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் 168-ம் நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் டெஸ்டானி ஐயாவாவையும், 10-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் எம்மா நவர்ரோ 7-6 (11-9), 6-3 என்ற செட் கணக்கில் சீனாவின் வாங் யாஃபனையும் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.