சென்னை: தமிழகத்தில் 2021-22-ம் நிதியாண்டு முதல் 2024-25-ம் நிதியாண்டு வரை 4 ஆண்டுகளில் சுமார் ரூ.6.70 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக, எம்எஸ்எம்இ ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் ஆய்வில் தெரிய வந்துள்ளது. “முற்போக்கு தமிழகத்தில் முதலீடு, மேம்பாடு மற்றும் வளர்ச்சி” என்ற 2021-22 முதல் 2024-25 வரையிலான ஆய்வின் 2-வது பதிப்பை, எம்எஸ்எம்இ ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் தலைவர் டி.எஸ்.ராவத் வெளியிட்டார்.
இது இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வழங்கிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் ஒன்றான தமிழகம், 2021-22 மற்றும் 2024-25-க்கு இடையில் சுமார் ரூ.6.70 லட்சம் கோடி முதலீட்டு திட்டங்களை ஈர்த்துள்ளது.
ரூ.1 லட்சத்து 56 ஆயிரத்து 646 கோடி மதிப்பிலான தற்போதைய திட்டங்களை நிறைவு செய்துள்ளது. ரூ.35,620 கோடி மதிப்பிலான நிலுவையில் உள்ள திட்டங்களை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது. மொத்த முதலீட்டு திட்டங்களான ரூ.6.70 லட்சம் கோடியில், தனியார் துறை பங்களிப்பு சுமார் ரூ.5.20 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
2021-22 நிதியாண்டில், தமிழகம் ரூ.1,58,412 கோடிக்கும், 2022-23-ல் ரூ.2,17,521 கோடிக்கும், 2023-24-ல் ரூ.2,17,095 கோடிக்கும், 2024-25-ல் ரூ.71,148 கோடிக்கும் புதிய முதலீட்டு திட்டங்களை ஈர்த்தது. 2021-22-ல் ரூ.31,586 கோடிக்கும், 2022-23-ல் ரூ.30,535 கோடிக்கும், 2023-24-ல் ரூ.57,993 கோடிக்கும், 2024-25-ல் ரூ.36,532 கோடிக்கும் திட்டங்கள் நிறைவடைந்தன.
2000-ம் ஆண்டு முதல் 13.84 பில்லியன் டாலர் ஒட்டுமொத்த அந்நிய நேரடி முதலீட்டு வரவுடன், தமிழகம் அந்நிய நேரடி முதலீட்டுக்கு மிகவும் கவர்ச்சிகரமான மாநிலமாக உள்ளது. மாநிலத்தின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. இருப்பினும், கடுமையான பிணையத் தேவைகள் மற்றும் வங்கிகளின் தயக்கம் காரணமாக, எம்எஸ்எம்இகள் அடிக்கடி முறையான நிதியுதவியைப் பெறுவதில் சிரமப்படுகின்றன.
பேரிடர் பாதித்த பகுதிகள் கடுமையான மூலதனப் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன.செலவு அதிகரிக்கும் அபாயத்தைத் தவிர்க்க, நிலுவையில் உள்ள முதலீட்டுத் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த உயர் அதிகாரம் கொண்ட குழுவை அமைக்க கவுன்சிலின் தலைவர் ராவத் பரிந்துரைத்துள்ளார். இவ்வாறு அந்த அறிக்கை கூறுகிறது.