சென்னை: ‘வைக்கம் விருது’க்கான விண்ணப்பங்களை செப்.10-ம் தேதிக்குள் அனுப்பலாம் என தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி, சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘சமூக நீதிக்காக வைக்கத்தில் போராடிய பெரியாரை நினைவுகூரும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் ‘வைக்கம் விருது’ சமூகநீதி நாளான செப்.17-ம் தேதி அரசால் வழங்கப்படும்’’ என்று 110-விதியின் கீழ் அறிவித்தார்.
அந்த வகையில் நடப்பாண்டும் ரூ.1 லட்சம் பரிசுத் தொகை மற்றும் தங்கப் பதக்கம் உள்ளடக்கிய விருது முதல்வரால் வழங்கப்படவிருக்கிறது. இதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க விரும்புவோர், மாவட்ட ஆட்சியர் பரிந்துரை மற்றும் சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன், பொதுத்துறை செயலாளரிடம் செப்.10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.