சென்னை: தமிழ்நாட்டில் முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் பொது மக்களின் தேவைகளுக்கான அனைத்து சேவைகளையும் வாட்ஸ்ஆப் வாயிலாக வழங்கிடும் செயல்பாட்டினை மேயர் பிரியா இன்று தொடங்கி வைத்தார்.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முதல்வரின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் மக்களுக்குத் தேவையான அனைத்து சேவைகளும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெருநகர சென்னை மாநகராட்சியின் மக்களுக்கான சேவைகள் தற்போது நம்ம சென்னை செயலி, மாநகராட்சியின் இணையதளம் (www.chennaicorporation.gov.in), 1913 அழைப்பு மையம், சமூக வலைதளங்கள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மேயர் பிரியா 2025-26-ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் மக்களுக்கான சேவைகள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக வழங்கப்படும் என அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் வழங்கப்படும் பொது மக்களுக்கான சேவைகள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக வழங்கப்படும் செயல்பாட்டினை மாநகராட்சி மேயர் பிரியா இன்று (25.08.2025) ரிப்பன் கட்டட வளாக அலுவலகக் கூட்டரங்கில் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார்.
இதற்கான Whats App Chatbot ஆனது சிறந்த டிஜிட்டல் தொழில் நுட்பத்தில், நிபுணர்களின் ஆலோசனைகளை மேற்கொண்டு, மக்கள் மிக எளிதாகப் பயன்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சேவையினைப் பெற தற்போது உருவாக்கப்பட்டுள்ள 94450 61913 என்கிற Whats App எண்ணை பொதுமக்கள் தங்கள் கைபேசியில் முதலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதனைத் தொடர்ந்து இந்த Whats App Chatbot எண்ணிற்கு “Hi” அல்லது ‘வணக்கம்’ என பதிவிட வேண்டும். பின்னர் பெருநகர சென்னை மாநகராட்சியின் சேவைகளை அதில் உள்ள உரிய வழிகாட்டலுடன் உள் நுழைந்து பெற்றிட வேண்டும்.
இதில் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ் தொடர்பான சேவைகள், சொத்து வரி செலுத்துதல், புகார் பதிவு, தொழில் வரி செலுத்துதல், வர்த்தக உரிமம் செலுத்துதல் மற்றும் புதுப்பித்தல், ஆவண பதிவிறக்கம், சமுதாயக் கூடம் முன்பதிவு, முதல்வர் படைப்பகம் தொடர்பான சேவைகள், நீச்சல் குளம் முன்பதிவு, செல்லப் பிராணிகளின் உரிமம் பதிவு, பொதுமக்கள் குறைதீர்க்கும் சேவைகள், நகரமைப்பு தொடர்பான சேவைகள், விண்ணப்பங்கள் கண்காணிப்பு, கடை வாடகை செலுத்துதல், கட்டடம் மற்றும் கட்டுமானக் கழிவுகள் தொடர்பான பதிவு உள்ளிட்ட பெருநகர சென்னை மாநகராட்சியின் 32 வகையான சேவைகளை மக்கள் எவ்வித அலைச்சலும் இன்றி தாங்கள் இருந்த இடத்தில் இருந்து இந்த Whats App Chatbot வாயிலாகப் பெற்றிட முடியும்.
இந்த Whats App Chatbot-ஐ மக்கள் எளிதாகப் பயன்படுத்தும் விதத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் உரையாட முடியும். மேலும் இந்த Whats App Chat bot-ல் பிற தகவல் சேவைகளாக, மண்டல அலுவலகம், வார்டு அலுவலகம் கண்டறிதல், அருகில் உள்ள வசதிகளைத் தெரிந்து கொள்ளுதல், பள்ளிக் கூடங்கள், கழிப்பிடங்கள், பேருந்து நிறுத்தும் இடங்கள், அம்மா உணவகம், மயான பூமி, சமுதாயக் கூடம், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற சமூக சுகாதார மையம், படிவங்கள் பதிவிறக்கம், அடுத்தடுத்து கேட்கப்படும் கேள்விகள் உள்ளிட்ட சேவைகளையும் பெற முடியும்.
மேலும், இதில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சொந்த சேவைகளில் பொழுதுபோக்கு வரி மற்றும் சுகாதாரச் சான்றிதழ் சேவைகளும் புதிதாக சேர்க்கப்பட்டு அதன் சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும். இந்த WhatsApp Chatbot மூலம் மக்களுக்கான சேவைகளை எளிதாகப் பெறுதல், 24 மணி நேரமும் சேவை கிடைக்கும் வசதி, இதனைப் பயன்படுத்துவதற்கான இயல்பான உரையாடல், எவ்வித காலதாமதமும் அலைச்சலுமின்றி மக்கள் தாங்கள் இருந்த இடத்தில் இருந்தே இந்த சேவைகளைப் பெறுதல் ஆகியன குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.
இதனைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாக இந்த Whats App Chatbot-ல் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் (CMWSSB) மற்றும் பதிவுத் துறை (TNREGIET) ஆகியவற்றின் சேவைகளையும் மக்களுக்கு வழங்கிடும் வகையில் கூடுதலான சேவைகள் இதில் விரிவாக்கம் செய்யப்படும்.
இவ்வாறாக தமிழ்நாட்டில் முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த WhatsApp chatbot சேவையானது மக்களுக்கு எளிதாக கிடைக்கப் பெற்று அவர்களுடன் சேர்ந்து பயணித்து சேவையாற்றுவது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி மேயர் 2025-26-ம் ஆண்டு நிதி நிலை அறிக்கை அறிவிப்பின்படி, சொத்து வரி மதிப்பீடு, பெயர் மாற்றம், திருத்தத்திற்கான இறுதி ஆணை அறிவிப்பு, புதிய மற்றும் புதுப்பித்தல் தொழில் உரிமங்கள், தொழில் வரி வழங்கும் அறிவிப்புகளுக்குப் பதிலாக ”QR Code”னை மேயர் வெளியிட்டார்.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்கள், பகுதி அலுவலகங்கள், வார்டு அலுவலகங்கள் மற்றும் சேவைத் துறைகளான சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய அலுவலகங்கள், தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகங்கள் மற்றும் அரசு இ-சேவை மையங்கள் ஆகிய இடங்களில் எளிதாக வரி செலுத்துவதற்கு ஏதுவாக பொருத்தப்படும் ”QR Code” அச்சிட்ட அட்டைகளையும்,
பெருநகர சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகத்தில் வாடகைக்கு ஒதுக்கப்பட்டுள்ள கடைகளில், ஒவ்வொரு வாடகை தாரருக்கும் தனித்தனியாக வாடகை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி செலுத்துவதற்கு ஏதுவாக அந்தந்த கடைகளில் பொருத்தப்படும். ”QR Code” அச்சிட்ட அட்டைகளையும் மேயர் வெளியிட்டு வழங்கினார்.
இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன், நிலைக் குழுத் தலைவர் (வரிவிதிப்பு (ம) நிதி) சர்பஜெயாதாஸ் நரேந்திரன், துணை ஆணையாளர்கள் சிவகிருஷ்ணமூர்த்தி, பிரதிவி ராஜ், (வருவாய் (ம) நிதி), மாநகர வருவாய் அலுவலர் கே.பி.பானு சந்திரன், பினாக்கில் வாட்ஸ்-அப் சேவை கம்பெனி சவுத் இந்தியா ஹெட் கவுரி சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.