கோவை: இந்திய மாணவர் சங்கத்தின் (எஸ்எஃப்ஐ) 27-வது தமிழ் மாநில மாநாடு திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளியில் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. முதல் நாள் நிகழ்வில், பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பேரணியில் அகில இந்திய தலைவர் ஆதர்ஷ் எம்.ஷாஜி, துணைத் தலைவர் மிருதுளா, மாநில தலைவர் சம்சீர் அகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இரண்டாவது நாள் நிகழ்வில், அகில இந்திய பொதுச்செயலாளர் ஸ்ரீஜன் பட்டாச்சார்யா உள்ளிட்டோர் பேசினர்.
மாநாட்டின் 3-வது நாளான நேற்று புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. சங்கத்தின் புதிய தலைவராக சென்னையைச் சேர்ந்த சி.மிருதுளா, செயலாளராக தவு.சம்சீர் அகமது மற்றும் துணைத் தலைவர்கள், இணைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். சங்கத்தின் மாநிலத் தலைவராக முதல்முறையாக பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கெனவே அகில இந்திய துணைத் தலைவராக பதவி வகித்துள்ளார்.
கல்வி நிலையங்களில் மாணவர் பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும், கல்லூரி மற்றும் பள்ளி வளாகங்களில் மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும், நிதி நெருக்கடியால் திவாலாகும் தமிழக பல்கலைக்கழகங்களை பாதுகாக்க வேண்டும், விடுதி மாணவர்களின் உணவுப் படியை உயர்த்த வேண்டும், சட்டக்கல்வி தனியார் மயமாவதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 40 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.