பாட்னா: பிஹாரில் வாக்கு திருட்டு நடைபெறுகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீண்டும் குற்றம் சாட்டி உள்ளார். வரும் நவம்பரில் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி அந்த மாநிலத்தில் அண்மையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டு கடந்த 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 65 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
இந்த சூழலில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை எதிர்த்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிஹார் முழுவதும் 16 நாட்கள் பேரணி நடத்தி வருகிறார். அவர் நேற்று பிஹாரின் அரரியா, புர்னியா பகுதியில் பேரணி நடத்தினார். அப்போது ராகுல் தலைமையில் மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
அரரியாவில் ராகுல் காந்தி பேசியதாவது: ஒரு நபருக்கு ஒரு வாக்கு என்று அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. ஆனால் ஏழைகளின் வாக்குகள் பறிக்கப்பட்டு வருகின்றன. பிஹாரில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியில் லட்சக்கணக்கான ஏழைகளின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. உயிரோடு இருப்பவர்கள், உயிரிழந்து விட்டதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஏழைகள், பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டு உள்ளது.
ஆளும் பாஜகவுக்கு ஆதரவாக மட்டுமே தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. வாக்காளர் சிறப்பு திருத்தப் பணியின் மூலம் பிஹாரில் வாக்கு திருட்டு நடைபெற்று இருக்கிறது. வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக அனைத்து கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் பாஜக மட்டும் மவுனம் காத்து வருகிறது. பாஜகவுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் இடையே ரகசிய கூட்டணி நீடிக்கிறது.
மகாராஷ்டிரா, ஹரியானா, கர்நாடகாவின் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடைபெற்றன. தற்போது பிஹாரிலும் முறைகேடுகள் நடைபெற்று உள்ளன. இதை அனுமதிக்க மாட்டோம். பிரதமர் நரேந்திர மோடி வாக்கு திருட்டில் ஈடுபடுகிறார். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான், ராகுல் காந்தியின் பேரணியை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதுகுறித்து ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அவர் கூறும்போது, ‘‘அமைச்சர் சிராக் குறித்து எதுவும் கூற விரும்பவில்லை. அவர் எனக்கு மூத்த அண்ணன் போன்றவர். அவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. விரைவில் அவர் திருமணம் செய்து கொள்ள அறிவுறுத்துகிறேன்’’ என்றார். அப்போது குறுக்கிட்ட ராகுல் காந்தி, “இந்த அறிவுரை எனக்கும் பொருந்தும்’’ என்று தெரிவித்தார்.
முத்தம் கொடுத்தவருக்கு அறை: பிஹாரின் புர்னியா பகுதியில், ராகுல், தேஜஸ்வி யாதவ் தலைமையில் நேற்று மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. ஏராளமான தொண்டர்கள் புடைசூழ ராகுல் முன்வரிசையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். கூட்ட நெரிசல் காரணமாக மோட்டார் சைக்கிளை அவர் மெதுவாக ஓட்டினார். அப்போது இளைஞர் ஒருவர் திடீரென கூட்டத்தில் புகுந்து ராகுலின் கன்னத்தில் முத்தம் கொடுத்தார். அந்த இளைஞருக்கு, ராகுல் காந்தியின் பாதுகாவலர் ஓங்கி ஓர் அறை விட்டார். அவரை பாதுகாவலர்கள் விரட்டிச் சென்றனர். இதை பார்த்த இளைஞர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.