மும்பை: அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் சேதேஷ்வர் புஜாரா நேற்று அறிவித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 2010-ம் ஆண்டில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமான புஜாரா, இதுவரை 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7,195 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 19 சதங்கள், 35 அரை சதங்களை விளாசியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட்டுக்கு அடுத்தபடியாக ‘இந்தியாவின் சுவர்’ என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் புஜாரா.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரது பேட்டிங் சராசரி 43.61-ஆக உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 16,217 பந்துகளை எதிர்கொண்டுள்ளார். 2023-ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில்தான் நேற்று தனது ஓய்வு அறிவிப்பை புஜாரா வெளியிட்டுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டுக்காகவே வாழ்ந்து வரும் இவருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சரியான வாய்ப்பு வழங்கவில்லை என ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
13-வது இந்தியர்: இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 13-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றவர் புஜாரா. மேலும், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் புஜாரா, 8-வது இடத்தில் உள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,074 ரன்களை சேர்த்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 சதங்கள் மற்றும் 11 அரை சதங்களைக் குவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவரது பேட்டிங் சராசரி 49.38 ஆகும். இந்திய அணிக்காக 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் விளையாடி உள்ளார். மேலும் முதல் தர கிரிக்கெட்டில் 21,000 ரன்களை கடந்துள்ளார்.
ஓய்வு குறித்து சேதேஷ்வர் புஜாரா கூறியதாவது: இந்திய அணியின் சீருடையை அணிந்து கொண்டு, தேசிய கீதம் பாடி, ஒவ்வொரு முறையும் மைதானத்தில் களமிறங்கிய போது என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயல்வேன். இந்த உணர்வை வெறும் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. அனைத்து நல்ல விஷயத்துக்கும் ஒரு முடிவு உண்டு என எல்லோரும் சொல்வதுண்டு. அனைத்து விதமான இந்திய கிரிக்கெட்டில் இருந்தும் நான் ஓய்வு பெற்றுக் கொள்கிறேன். இதை மிகுந்த நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.
இந்த விளையாட்டு எனக்கு இவ்வளவு நல்ல விஷயங்களை கொடுக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எல்லையற்ற வாய்ப்புகள் எல்லையற்ற அனுபவங்கள், அன்பு, பாசம் என அனைத்தையும் இந்த கிரிக்கெட் வழங்கி இருக்கிறது. இவை அனைத்தையும் தாண்டி என் நாட்டுக்காகவும் என் மாநிலத்துக்காகவும் விளையாட வாய்ப்பு கிடைத்ததை என்றும் மறக்க மாட்டேன்.
எனக்கு வாய்ப்பு வழங்கிய பிசிசிஐ, சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் என அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா, பஞ்சாப், பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளில் இடம்பெற்றிருந்தார் புஜாரா.